Showing posts with label குண்டுவீச்சு. Show all posts
Showing posts with label குண்டுவீச்சு. Show all posts

Saturday, December 6, 2008

கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் நிலை மீது விமானப்படை குண்டு வீச்சு


கொழும்பு, டிச.7-
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் நிலை மீது இலங்கை விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. மேலும் சில இடங்களை பிடித்து விட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி நகரை கைப்பற்றுவதற்காக இலங்கை ராணுவம் பல்முனை தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. அங்கு உச்சக்கட்ட சண்டை நடந்து வருகிறது.
நேற்று காலை கிளிநொச்சி அருகேயுள்ள பரந்தன் பகுதியில் இலங்கை போர் விமானங்கள் விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது சரமாரியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் விடுதலைப்புலிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதேபோல் நேற்று கிளிநொச்சியின் அடம்பன் அருகே 7 கி.மீட்டர் மேற்கே இலங்கை ராணுவத்தின் 57-வது படைப்பிரிவு முன்னோக்கிச்சென்று விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது.

அங்கு இரு தரப்பினருக்கும் இடையே 4 மணி நேரம் துப்பாக்கி சண்டை நீடித்தது. மாலையில் அடம்பன் பகுதியிலிருந்து விடுதலைபுலிகள் பின்வாங்கி சென்றதாகவும், அந்தப்பகுதி தங்கள் வசம் வந்திருப்பதாகவும் இலங்கை ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
வவுனியாவில் புலியங்குளம் மற்றும் நெடுங்கேணியை இணைக்கும் சாலையில் கனகராயன் அறு பாலம் அருகே விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தின் அதிரடிப்படையினருக்கும் இடையே நேற்று தீவிர சண்டை நடந்தது. இதில் விடுதலைப்புலிகளின் தாக்குதலை ராணுவம் முறியடித்ததாகவும், பின்னர் கனகராயன் பாலம் பகுதியை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாகவும் ராணுவத் தளபதி ரோஹனா பண்டாரா தெரிவித்தார்.

இதேபோல் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கனகராயன் குளம் நகரை ராணுவம் கைப்பற்றியதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த சண்டைகளின் போது 7 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும், ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இலங்கை ராணுவம் கூறியுள்ளது.
இதனிடையே, யாழ்ப்பாணம்-கண்டி நெடுஞ்சாலையை இணைக்கும் கிளாலி பகுதியில் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக இருதரப்பினருக்கும் கடும் சண்டை நீடித்து வருகிறது.