Wednesday, April 22, 2009

இன்றைய செய்திகள் (ஏப்ரல் இருபத்தி இரெண்டு )






ராஜபக்சே விசேஷ தூதர் டெல்லி வருகிறார்

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கான ராணுவ தாக்குதல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த 1 லட்சம் பேர், அரசு கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துவிட்டதாக, ராணுவம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில், இடம் பெயர்ந்துவரும் தமிழர்களின் மறுவாழ்வுக்கு உதவி கேட்பதற்காக, இலங்கை அதிபர் ராஜபக்சே அவருடைய மூத்த ஆலோசகரும் சகோதரருமான பசில் ராஜபக்சேவை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறார். அவர் டெல்லி வரும் தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. என்றாலும் விரைவில் அவர் இந்தியா செல்வார் என்று கொழும்பு அரசு வட்டார தகவல்கள் தெரிவித்தன. அரசு கட்டுப்பாடு பகுதிக்கு வந்துள்ள தமிழர்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக உதவி கேட்டு, இந்திய அரசுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க., வேட்பாளர் ஜே.கே.ரித்தீசுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது

ராமநாதபுரம் தி.மு.க., வேட்பாளர் ஜே.கே.ரித்தீசுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது. பசும்பொன் தேவர் குருபூஜை மோதல் வழக்கில், ராமநாதபுரம் தி.மு.க., வேட்பாளர் ஜே.கே.ரித்தீஷ் குமாருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, கமுதி கோர்ட் உத்தரவிட்டது. பசும்பொன்னில் தேவர் குருபூஜையின் போது, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன் மகனான ஆர்.மங்கலம் ஒன்றிய செயலர் ஆனந்த் தரப்பினருக்கும், தற்போதைய ராமநாதபுரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் ரித்தீஷ்குமார் தரப்பினருக்கும் இடையே அபிராமம் அருகே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், ரித்தீஷ் குமார் தரப்பை சேர்ந்த 37 பேரில் 36 பேர் ஜாமீன் பெற்றனர். ரித்தீஷ்குமார் மட்டும் ராமநாதபுரம் செஷன்ஸ் கோர்ட்டில் ஜாமீன் ஆர்டர் வாங்கி பிணையம் கொடுக்காமல் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார். இது தொடர்பாக ரித்தீஷ் குமாரை தலைமறைவு கைதியாக கருதி அவருக்கு கமுதி கோர்ட்டில் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கில் போலீசார் கைது செய்வதை தவிர்க்கும் வகையில், முன்ஜாமீன் கேட்டு அவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு செய்துள்ளார். அம்மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. ரித்தீஸ் குமாருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது.

நளினியை விடுதலை செய்யக்கோரி வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிபதிகள் தர்மாராவ், சி.டி.செல்வம் ஆகியோர் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வக்கீல்கள் வாதத்திற்கு பிறகு வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தனர்.ராஜீவ்காந்தி கொலை வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்தபோது, ஜெயின் கமிஷன் அறிக்கையை ஏன் தாக்கல் செய்யவில்லை என்பது குறித்தும், ஜெயின் கமிஷன் அறிக்கை அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்தும் மனுதாக்கல் செய்யும்படி சி.பி.ஐ.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஸ்ரீபெரும்புதூரில் தே.மு.தி.க. வேட்பாளர் மனு தாக்கல்

ஸ்ரீபெரும்புதூர் மணிக்கூண்டு அருகே இருந்து 1500க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் தே.மு.தி.க., கொடியை பிடித்தபடி முரசு அடித்து ஊர்வலமாக வந்த தே.மு.தி.க., வேட்பாளர் அருண் சுப்பிரமணியம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். மாவட்ட செயலாளர்கள் அனகை முருகேசன், சி.எச்.சேகர், மற்றும் நகர ஒன்றிய வட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பீலிபட் தொகுதியில் வருண் காந்தி மனு தாக்கல்

உத்தரபிரதேச மாநிலம் பீலிபட் தொகுதியில் வருண் காந்தி பாரதீய ஜனதா வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் தேர்தல் பிரசாரத்தின் போது மத விரோத கருத்துக்களை வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். தற்போது பரோலில் வெளியே வந்துள்ளார். இந்த பிரச்சினையை அடுத்து வருண் காந்தியை வேட்பாளராக நிறுத்த கூடாது என்று பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தன. ஆனால் அதை பாரதீய ஜனதா ஏற்கவில்லை. வருண் காந்தியை மாற்ற மாட்டோம் என்று திட்டவட்டமாக அறி வித்தது. வருண் காந்தி இன்று பீலிபட் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
விரைவில் சட்டசபை தேர்தல் : நாஞ்சில் சம்பத்

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட நாஞ்சில் சம்பத் இன்று சிறையில் இருந்து வெளி வந்தார். அப்போது பேசிய அவர், லோக்சபா தேர்தலுக்கு பின் கருணாநிதி சட்டசபை தேர்தலை சந்திக்கும் காலம் கனிந்து வருகிறது. தமிழ்நாட்டில் எல்லா சிறைகளையும் பார்த்து விட்டேன் சேலம் சிறையை பார்க்க ஆவலாக உள்ளது. எனவே அடுத்து என்னை சேலம் சிறையில் அடைக்க கருணாநிதி ஆவன செய்ய வேண்டும் என அவர் கூறினார்.

நாளை நடைபெறும் வேலை நிறுத்தத்தில் ம.தி.மு.க. தே.மு.தி.க. பங்கேற்காது

நாளை நடைபெறும் வேலை நிறுத்தத்தில் ம.தி.மு.க., தே.மு.தி.க. பங்கேற்காது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

என் பேரைச் சொல்ல எதிர் கட்சிகள் தயங்குகின்றன : விஜயகாந்த்

சேலம் மாவட்டத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கள்ளக்குறிச்சி வேட்பாளர் சுதீ‌ஸை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது : எதிர்கட்சிகளான அ.தி.மு.க.,வும் - தி.மு.க.,வும் எனது பெயரை சொல்ல கூட தயங்குகின்றன. என் பெயரை கேட்டாலே எதிர்க் கட்சிகள் அதிர்கின்றன. என்னை பற்றி பேசினால் அவர்களே என் வளர்ச்சிக்கு வழி வகுத்ததாக ஆகி விடுமோ என அஞ்சுகின்றனர். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். இது தேர்தலில் ஓட்டு சேகரிப்பதற்காக அவர் நடத்தும் நாடகம். இதை கண்டு மக்கள் ஏமாறக்கூடாது . திருவாரூரில் இருந்து வெறும் மஞ்சள் பையுடன் வந்த கருணாநிதி இன்றைக்கு கோடியாக கோடியாக சொத்து சேர்த்தது எப்படி.. ஜெயலலிதாவும், சசிகலாவும், சொத்துக்களை குவித்து வைத்துள்ளனர். அவர்கள் இப்படி சொத்துக்களை குவித்ததற்கு நீங்கள் தான் காரணம். நீங்கள் ஓட்டுப் போட்டதால் தான் அவர்கள் வெற்றி பெற்றனர். 40 தொகுதிகளிலும் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்து பாருங்கள். நான் மக்களுக்கு சேவை செய்வேன் என்பதற்கு நானே எடுத்துக்காட்டும் கூறுகிறேன். தமிழகம் முழுவதும் கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் அமைத்துள்ளேன். அதில் ஒரு லட்சம் பேர் பயணடைந்துள்ளனர். 26,00 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். நான் ஆட்சிக்கு வந்தால் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்ப‌தோடு , படிக்காத இளைஞர்களுக்கும் தொழிற்கல்வி மூலம் வேலை வாய்ப்பு அளிப்பேன் . ஒரு ரூபாய் அரிசியை சமைத்தால் வாடை குடலை புரட்டுகிறது. வாழப்பாடியில் சமைத்தால் இங்கு வரை நாற்றம் அடிக்கிறது. மாற்றம் வரவேண்டும். எனவே தே.மு.தி.க., வுக்கு ஓட்டளியுங்கள் . இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

நாளை நடைபெறும் வேலை நிறுத்தத்தில் அமைதியாக ஈடுபடுங்கள்: கருணாநிதி வேண்டுகோள்

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ் இனத்தைப் படுகொலை புரியும் இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்கவும், ஈழத்தில் மாண்டு மடிந்து கொண்டிருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்றவும் மத்திய அரசு ஒரு நொடியும் தாதமதிக்காமல் இலங்கையில் போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்வதற்காக தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும்கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ்ப் பெருங்குடி மக்கள் அனைவரும் அவர்களாகவே முன் வந்து நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை அமைதியான முறையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன். இது இலங்கை அரசுக்கான கண்டனம் மாத்திரமல்ல இலங்கையில் செத்துக் கொண்டிருக்கிற தமிழ் இனத்துக்காக விடுகின்ற கண்ணீரும் கூட என்கிற உணர்வோடு இந்த வேலை நிறுத்தத்தில் அனைவரும் கலந்து கொள்ள மீண்டும் வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


விடுதலைப்புலிகள் முக்கிய புள்ளிகள் சரண்

விடுதலைப்புலிகள் முக்கிய புள்ளிகளான தயா மாஸ்டர் மற்றும் ஜார்ஜ் சரணடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளின் செய்தி தொடர்பாளர் தயா மாஸ்டர் மற்றும் ஜார்ஜ் ‌இலங்கை ராணுவத்தின் 58வது பிரிவு படையினரிடம் சரணடைந்துள்ளதாக இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நாணயகரா தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்டில் நக்சலைட்டுகள் சிறை பிடித்த 700 பயணிகள் விடுவிப்பு

பீகார், ஜார்க் கண்ட் மாநிலங்களில் 2-வது கட்ட தேர்தல் நாளை நடக்கிறது. இந்த தேர்தலை புறக்கணிக்கும்படியும் முழு அடைப்பு நடத்தவும் நக்சலைட்டுகள் இன்று அழைப்பு விடுத்து இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை பயணிகள் ரெயிலை நக்சலைட்டுகள் சிறை பிடித்தனர். அந்த ரெயில் ஜார்க்கண்ட் மாநிலம் பர்கானாவில் இருந்து மொகுல்சாரை என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்தது. வழியில் லேட்கர் மாவட்டத்தில் ஹெலக கார்கா ரெயில் நிலையம் அருகே அந்த ரெயிலை நக்சலைட்டுகள் வழி மறித்து சிறை பிடித்தனர்.ரெயிலில் 700 பயணிகள் இருந்தனர். பயணிகளை தீவிரவாதிகளின் துப்பாக்கி முனையில் பணய கைதிகளாக வைத்து உள்ளனர். பந்த் நடக்கும் போது ரெயில்களை ஓட்டக் கூடாது என்று ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். சிறிது நேரத்தில் நக்சலைட்டுகள் சிறை பிடித்த ரெயிலை விடுவித்தனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரி கூறும்போது, "700 பயணிகளையும் நக் சலைட்டுகள் விடுவித்தனர். பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். விடுவிக்கப்பட்ட அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது என்றார்.

நாராயணசாமிக்கு காமராஜர் சமூக நீதி இயக்கம் ஆதரவு

புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவு அளிப்பதாக காமராஜர் சமூக நீதி இயக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, முன்னாள் புதுச்சேரி சுகாதராத் துறை அமைச்சரும், காமராஜர் சமூக நீதி இயக்க நிறுவனருமான பெருமாள் தெரிவிக்கும் போது, வரும் மே 13ம் தேதி நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என ‌கூறினார்.

வேலை நிறுத்தத்துக்கு காங்கிரஸ் ஆதரவு

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, பொருளாளர் சுதர்சனம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இலங்கைப் போரால் பலியாகி வரும் அப்பாவி தமிழர்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு உடனடியாக அங்கு போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திட ஜன நாயக முற்போக்கு கூட் டணி தலைவர் முதல்- அமைச்சர் கருணாநிதி நாளை (வியாழக்கிழமை) தமிழகத்தில் அறிவித்துள்ள முழு வேலை நிறுத்த வேண்டுகோளை தமிழ்நாடு காங்கிரஸ் ஏற்று அதில் பங்கேற்கிறது. வேலை நிறுத்தம் முழு வெற்றியைப் பெற தமிழகத்தின் அனைத்து காங்கிரஸ் சகோதர, சகோதரிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பை அளித்திட வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


நட்சத்திர சின்னம் கேட்டு திருமாவளவன் வழக்கு: 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

விடுதலை சிறுத்தை கட்சிக்கு நட்சத்திர சின்னம் ஒதுக்க கோரி அக்கட்சி தலைவர் திருமாவளவன் வழக்கு தொடர்ந்து இருந்தார். இது தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்டில் விசாரணைக்கு வந்தது. அதனைதொடர்ந்து, வழக்கு 24ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

காஞ்சீபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக விஸ்வநாதன் போட்டி

காஞ்சீபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக பி.விசுவநாதன் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் மேலிடம் இன்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. மேலும் விருதுநகர் தொகுதியில் சுந்தரவடிவேலுக்கு பதில் மானிக் தாகூர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நக்சலைட்டுகளை ஒழிப்பதில் தவறிவிட்டது பீகார் : லாலு

நக்சலைட்டுகளை ஒழிப்பதில் பீகார் அரசு தோல்வியடைந்து விட்டது என ரயில்வே துறை அமைச்சர் லாலு தெரிவித்துள்ளார். பீகாரில் தேர்தலை சீர்குலைக்கும் விதமாக, பர்கானாவில் இருந்து முகல்சாராய் பகுதிக்கு சென்ற பயணிகள் ரயிலை மவோயிஸ்டுகள் சிறைப்பிடித்து, பின்னர் விடுவித்தனர். இதுகுறித்து லாலு தெரிவிக்கும் ‌போது, நக்சலைட்டுகளால் ரயில் கடத்தப் பட்டதை நினைத்து மிகவும் வேதனைப்படுகிறேன். நக்சலைட்டுகளை ஒழிப்பதில் நிதீஷ்குமார் அரசு முற்றிலும் ‌தோல்வி அடைந்து விட்டது என தெரிவித்தார்.

போர் பகுதியில் இருந்து தமிழர்கள் அனைவரும் தப்பி விட்டனர்: இலங்கை அரசு தகவல்

இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- ராணுவத்தின் 58-வது படை பிரிவு இதுவரை 48 ஆயிரத்து 501 தமிழர்களை மீட்டு உள்ளது. 55-வது டிவிசன் 10 ஆயிரத்து 743 பேரை மீட்டு உள்ளது. 53-வது டிவிசன் 3267 பேரை மீட்டு உள்ளது. இத்துடன் நேற்று இரவு வரை 62 ஆயிரத்து 609 பேரை மீட்டு உள்ளோம். தற்போதைய நிலையில் போர் பகுதியில் பொது மக்கள் வேறு யாரும் இல்லை. அத்தனை பேரும் தப்பி வந்து விட்டனர். மக்கள் வெளியேறிய பகுதியில் ராணுவம் உள்ளே நுழைந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை விடுதலைப்புலிகள் தரப்பில் மறுத்து உள்ளனர். இலங்கை அரசு முன்னுக்குப்பின் முரணான தகவலை கூறி உள்ளது. இன்னும் லட்சக்கணக் கான மக்கள் பாதுகாப்பு பகுதியிலேயே உள்ளனர் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

பந்தினால் விமான சேவை பாதிக்கப்படாது

பந்தினால் விமான சேவை பாதிக்கப்படாது என சென்னை விமான நிலைய இயக்குநர் நடராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்திலிருந்து வழக்கம் போல் விமானங்கள் இயங்கும் ‌என அவர் தெரிவித்துள்ளார்.


நாளை வேலை நிறுத்தம்:அ.தி.மு.க. பிரசாரம் திட்டமிட்டபடி நடக்கும்- ஜெயலலிதா

"போர் நிறுத்தம் செய்யுங்கள்'' என்று உலகமே கேட்கும் இந்த நேரத்தில் கூட, "வேலை நிறுத்தம் செய்யுங்கள்'' என்று இங்கே முதலமைச்சர் கருணாநிதி மீண்டும் ஒர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். கருணாநிதியின் வேலை நிறுத்த அறிவிப்பு உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டிருக்கிறது. பல தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் பொது வேலை நிறுத்தங்களை சட்ட விரோதம் என்றும் அறிவித்திருக்கிறது. வேலை நிறுத்தம் போர் நிறுத்தத்திற்கு வழி செய்யுமா? இலங்கையில் மடிந்து கொண்டிருக்கும் தமிழர்களை எண்ணி தமிழ் நாட்டில் கலங்கி நிற்கும் தமிழர்களுக்கு மேலும் பல இழப்புகளையும், இடைஞ்சல்களையும் தான் பொது வேலை நிறுத்தம் தரும். இந்த வேலை நிறுத்த அறிவிப்பு வெற்று வெளிவேடம். எனவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெயிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.
உருதில் குற்றப் பத்திரிகை : கசாப் மனு தள்ளுபடி

மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப் , குற்றப்பத்திரிகையில் இருப்பது புரியவில்லை எனவும், எனவே குற்றப்பத்திரிகையை உருதில் மொழியாக்கம் செய்து தருமாறு மனு தாக்கல் செய்திருந்தான். அவனது மனு மீதான விசாரணை இன்று சிறப்பு கோர்ட்டில் நடந்தது. அஜ்மலின் மனு நிராகரிக்கப்பட்டது. மேலும் கசாப் தரப்பில் ஆஜராகி அவன் மீதுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்த்து வாதாட மே 2ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.

ம.தி.மு.க. அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்த 5 பெண்கள் கைது

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பல்வேறு பெண்கள் அமைப்பை சேர்ந்த 100 பெண்கள் சென்னையில் சாகும் வரை உண்ணா விரதம் மேற்கொண்டனர். பொது இடத்தில் உண்ணா விரதம்இருக்க அவர்களுக்கு அனுமதி தராததால் ம.தி.மு.க. அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். 10-வது நாளாக உண்ணா விரதம் இருக்கும் பெண்கள் மிகவும் சோர்வுடன் காணப்பட்டனர். அவர்களில் 5 பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. ம.தி.மு.க. அலுவலகத்தில் படுத்து தூங்கி போராட்டம் செய்து வரும் அவர்களை இன்று போலீசார் கைது செய்தனர். போலீஸ் இணை கமிஷனர் ரவிக்குமார், துணை கமிஷனர் அன்பு ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று அதிகாலை 5.45 மணியளவில் தாயகம் சென்றனர். அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண்களை போலீசார் தட்டி எழுப்பினார்கள். உடல்நிலை மோசமாக இருந்த 5 பெண்கள் யார்? என்று விசாரித்தார்கள். அவர்களை கைது செய்து வேனில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட லோகநாயகி, ஜெயமணி,சுமதி, சித்ராதேவி, தங்கமணி ஆகிய பெண்களுக்கு போலீசார் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இலங்கையில் இறுதி கட்ட போர்: விடுதலைப்புலிகள் ஊடுருவலை தடுக்க தமிழ் நாட்டில் பலத்த பாதுகாப்பு

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடை பெறும் போர் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. எந்த நேரத்திலும் விடுதலைப் புலிகளை சிங்கள ராணுவம் சுற்றி வளைக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே, விடுதலைப்புலிகள் அங்கிருந்து தப்பி தமிழ் நாட்டுக்குள் ஊடுருவலாம் என்ற நிலை இருக்கிறது. மத்திய அரசும் இது குறித்து தமிழக அரசை எச்சரித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக கடற்கரை பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராஜபக்சே "கெடு"வை ஏற்க விடுதலைப்புலிகள் மறுப்பு: "சரண் அடைய மாட்டோம்"- "தொடர்ந்து போராடுவோம்" - என்று திட்டவட்ட அறிவிப்பு

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனும் மற்ற தளபதிகளும் 24 மணி நேரத்திற்குள் சரண் அடைய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சே இறுதி கெடு விதித்து இருந்தார். இந்த கெடு இன்று பகல் 12 மணியுடன் முடிவடைந்தது. ஆனால், இந்த கெடுவை விடுதலைப்புலிகள் நிராகரித்துவிட்டனர். அதைத்தொடர்ந்து, இலங்கை ராணுவத்தினர் மீண்டும் தமிழர்களை கேடயமாக பயன்படுத்தி வலைஞர் மடம், மாத்தளன் ஆகிய இரு முனைகளில் முன்னேறிச்சென்று தாக்குதல் நடத்தினார்கள். இதற்கிடையில், "இலங்கை ராணுவத்திடம் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம்; தமிழ் மக்களின் உதவியுடன் தொடர்ந்து போர் புரிந்து வெற்றி பெறுவோம்'' என்று, விடுதலைப்புலிகளின் அமைதி செயலக பொதுச்செயலாளர் புலித்தேவன் அறிவித்தார்.

`ராய்ட்டர்' செய்தி நிறுவனத்துக்கு டெலிபோன் மூலம் அளித்த பேட்டியில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். போர் முனையில் பாதுகாப்பு பகுதி எல்லையில் இருந்து பேசுவதாக அவர் தெரிவித்தார். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனும் அந்த பகுதியில் இருந்து போரை நடத்தி வருவதாக புலித்தேவன் கூறினார்

உலக நாடுகள் இனியும் தாமதிக்காமல் நிரந்தர போர் நிறுத்தத்துக்கு வற்புறுத்தாவிட்டால், ரத்த ஆறு ஓடுவதை தடுக்க முடியாது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். புலித்தேவன் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது-

சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகள், `நாபாம்' மற்றும் `பாஸ்பரஸ்' விஷக்குண்டு தாக்குதலில் 1000 பேர் பலியாகி உள்ளனர். 2300 பேர் படுகாயம் அடைந்தனர். பலியான நூற்றுக்கணக்கானவர்களின் உடல்கள் மாத்தளன் மற்றும் பொக்கணை பகுதியில் இன்னும் சிதறிக்கிடக்கின்றன. படுகாயம் அடைந்த 600 பேர் முள்ளிவாய்க்கால் பகுதியில் பள்ளிக்கூடத்தில் செயல்பட்டுவரும் தற்காலிக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு புலித்தேவன் கூறினார். அதேபோல், தமிழர்களுக்கு எதிராக மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக ராணுவம் வெளியிட்ட தகவலை, விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பி.நடேசன் மறுத்து இருக்கிறார். 3-வது நாட்டின் மேற்பார்வையில் போர்நிறுத்தத்துக்கு விடுதலைப்புலிகள் தயார் என்றும் அவர் அறிவித்தார்.

"ராகிங்' வழக்கில் இன்று தீர்ப்பு

"ராகிங்' வழக்கில் தலைமறைவாக உள்ள கல்லூரி மாணவர்களின் முன்ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு கூறப்படுகிறது.கோவை, பி.எஸ்.ஜி., கல்லூரி மாணவர் அகில் தேவ். இருவாரங்களுக்கு முன், இவரது அறைக்குள் புகுந்த சீனியர் மாணவர்கள் ராகிங் செய்து, அடித்து சித்ரவதை செய்தனர். இதில், மாணவரின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த சீனியர் மாணவர்கள் ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கில் தலைமறைவாக உள்ள மாணவர்கள் அஸ்வின், அர்ஜூன் ஆகியோர் சார்பில், முன் ஜாமீன் கேட்டு, கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு மீதான வாதம் முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்படுவதாக இருந்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர் சார்பில் நேற்று, மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய் யப்பட்டது. அதில், தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதால், குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களுக்கு முன்ஜா மீன் வழங்கக் கூடாது என, தெரிவிக்கப்பட்டது. இதை பரிசீலித்த மாவட்ட நீதிபதி சொக்கலிங்கம், முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்தார்.
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பெண்கள் உண்ணாவிரதம் 9-வது நாளாக நீடிப்பு

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி சென்னையில் பெண்கள் நடத்தி வரும் உண்ணாவிரதம் இன்று 9-வது நாளாக நீடித்தது. போராட்டத்தை கைவிட வேண்டும் என்று விஜயகாந்த் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்தார்.

புது சட்டசபை பணி: முதல்வர் பார்வை

புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலகத்தின் கட்டுமானப் பணிகளை முதல்வர் கருணாநிதி பார்வையிட்டார். சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலகம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளை முதல்வர் கருணாநிதி பார்வையிட்டார். உயர் அதிகாரிகளுடன், பணிகள் குறித்து விவாதித்து ஆலோசனைகள் வழங்கினார். அப்போது, உள்துறை முதன்மைச் செயலர் மாலதி, நிதித்துறை முதன்மைச் செயலர் ஞானதேசிகன், சென்னை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் பொதுப்பணித் துறை உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

பயங்கரவாதத்தை எந்த மதமும் போதிக்கவில்லை: பிரதிபா

பயங்கரவாதத்தை எந்த மதமும் போதிக்கவில்லை என, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மூன்று நாள் பயணமாக ஸ்பெயின் மற்றும் போலந்து நாடுகளுக்கு சென்றுள்ளார். ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் வசிக்கும் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதிபா கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "பயங்கரவாதத்தால் மும்பை மட்டுமல்ல, மேட்ரிட் போன்ற நகரங்களும் பாதிக்கப் பட்டுள்ளன. யங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு தேவை. "அனைவரும் ஒன்றுபடுவதன் மூலமே பயங்கரவாதத்தை களைய முடியும். மக்களுக்கு தீமை தரும் பயங்கரவாதத்தை எந்த மதமும் போதிக்கவில்லை' என்றார்.

ஸ்பெயின் மன்னர் ஜுவான் கார்லோஸ், அரசி சோபியா உள்ளிட் டோரையும் பிரதிபா சந்திக்க உள்ளார். ஸ்பெயின் பார்லிமென்டிற்கு அவர் செல்ல இருக்கிறார்.

தொழில் மற்றும் வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் அவர் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார்.

கள்ளுக்கடையை திறப்பதில் தவறு இல்லை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான கள்ளுக்கடை திறப்பு என்பது நியாயமானதுதான். அரசு மதுபானக்கடைகளிலே விஸ்கி, பிராந்தி விற்பனை செய்யும்போது விஞ்ஞானிகளால் உணவுப்பொருள் என்று நிரூபிக்கப்பட்ட கள்ளை விவசாயிகள் இறக்குவது, விற்பது, குடிப்பதில் தவறு கிடையாது. மாநில அரசிடம் இதை வலியுறுத்த வேண்டும். இதற்கு எங்கள் கட்சியில் உள்ள சில பொறுப்பாளர்கள் தடையாக இருந்தால் அவர்கள் பற்றி சோனியாகாந்தியிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவேன். அதே நேரம் பரிபூரண மதுவிலக்குக்கும் பூரண ஆதரவு உண்டு. இவ்வாறு மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
வருண் கோரிக்கை: நிராகரித்தது தேர்தல் கமிஷன்

"பிலிபிட் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கண்காணிப்பாளரை மாற்ற வேண்டும். நடுநிலையான பார்வையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்' என்ற பா.ஜ., வேட்பாளர் வருணின் கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்து விட்டது. இதுதொடர்பாக துணை தேர்தல் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: பிலிபிட் மாவட்ட கலெக்டரையும், போலீஸ் கண்காணிப்பாளரையும் மாற்றுவதற்கான காரணம் எதுவும் இருப்பதாக கமிஷன் கருதவில்லை. அதனால், வருணின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. தேர்தல் பணிகளை மேற்பார்வையிடும் பார்வையாளர்கள் அனைவரும் நடுநிலையுடன் செயல்படுபவர்கள் என்பதால், நடுநிலையான பார்வையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரிக்கிறோம். முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் வீடியோ எடுக்கப்படும். வருணுக்கு பாதுகாப்பு அளிக்கும் விவகாரம் குறித்து மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும். ஒருவருக்கு எவ்வளவு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் மதிப்பிட முடியாது. இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தமிழ்நாடு முழுவதும் வியாழக்கிழமை வேலை நிறுத்தம்-கருணாநிதி

இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட மத்திய அரசை வற்புறுத்தி தமிழ்நாடு முழுவதும் 23-ந் தேதி (வியாழக்கிழமை) வேலைநிறுத்தம் நடைபெறும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நான் இன்று எழுதியுள்ள உடன்பிறப்புகளுக்கான கடிதத்தைத் தொடர்ந்து இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்கவும், ஈழத்தில் மாண்டு மடிந்து கொண்டிருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்றவும் மத்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் இலங்கையில் போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக, தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ் பெருங்குடி மக்கள் அனைவரும் அவர்களாகவே முன்வந்து 23-4-2009 வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இது இலங்கை அரசுக்கான கண்டனம் மாத்திரமல்ல, இலங்கையில் செத்துக் கொண்டிருக்கிற தமிழ் இனத்துக்காக விடுகின்ற கண்ணீரும்கூட என்கிற உணர்வோடு இந்த வேலைநிறுத்தத்தில் அனைவரும் கலந்து கொள்ள மீண்டும் வேண்டுகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார். வேலை நிறுத்தம் நடைபெறும் 23-ந் தேதி அன்று படப்பிடிப்பு உள்ளிட்ட சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளும் நடைபெறாது என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் கூறினார்.

ஜே.கே. ரித்தீஷ் முன்ஜாமீன் கோரிய வழக்கு: இன்று விசாரனை

தேவர் குருபூஜையின் போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஜே.கே. ரித்தீஷ் கோரிய முன்ஜாமீன் வழக்கு இன்று விசாரனைக்கு வருகிறது. லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார் நடிகர் ஜே.கே. ரித்தீஷ். கடந்த தேவர் குருபூஜையின் போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக இவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம். இதனால் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரியிருந்தார், இதுதொடர்பான வழக்கு விசாரனை இன்று நடைபெறுகிறது.


பாராளுமன்ற தேர்தலுக்காக இதுவரை 277 பேர் வேட்புமனு தாக்கல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் 5-வது கட்டமாக மே மாதம் 13-ந் தேதி ஒரேநாளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் 4-வது நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் 60 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 277 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா குறிப்பிட்டார்.

விஜய டி.ராஜேந்தர் இன்று மனு தாக்கல்

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜய டி.ராஜேந்தர் இன்றும், தே.மு.தி.க., சுதீஷ் நாளையும் மனு தாக்கல் செய்கின்றனர். கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்கள் ஒரே நாளில் மனு தாக்கல் செய்னர். ஒரே நாளில் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ததால், கள்ளக்குறிச்சி நகரம் திக்குமுக்காடியது. இந்நிலையில், தே.மு.தி.க., வேட்பாளர் சுதீஷ், லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜய டி.ராஜேந்தர் நாளை (23ம் தேதி) மனு தாக்கல் செய்வதாக அறிவித்திருந்தனர். கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., ஆறுமுகம் இரு கட்சியினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். முன்பே அறிவித்தபடி தே.மு.தி.க., 23ம் தேதி(நாளை)யும், இன்று விஜய டி.ராஜேந்தரும் மனு தாக்கல் செய்வது என முடிவானது.

லாலுவுக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்காது: காங்கிரஸ் பதிலடி

பீகார் மாநிலம், சமஸ்திபூர் நகரில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு மத்திய வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி வந்தார். அப்போது அவர் லாலுவை கடுமையாக தாக்கிப் பேசினார். அவர் கூறியதாவது:- காங்கிரசுடனான உறவை முறித்துக் கொண்ட பிறகு லாலு பிரசாத்தும், அவரது கட்சியும் பீகார் மாநிலத்திலும், நாட்டின் ஏனைய பகுதிகளும் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. மத்தியில் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யார்?.. பா.ஜனதாவா?.. தேசிய ஜனநாயக கூட்டணியா?.. மூன்றாவது அணியா?... அல்லது லாலுவா?.. ஆட்சியை அமைப்பதை விடுங்கள். அவர் எந்த அணியில் இருக்கிறார் என்பதே தெளிவாகத் தெரியவில்லை. லாலுவுடன் எந்தவொரு பெரிய கட்சியும் இல்லை. எனவே அவருக்கு மத்திய மந்திரி சபையில் மீண்டும் இடம் கிடைப்பது கஷ்டம்தான் என்று கூறினார். இதற்கு, லாலுபிரசாத் பாட்னா நகரில் பேட்டியளித்தபோது பதிலடி கொடுத்தார். `நாங்கள் இல்லாமல் யார் ஆட்சியமைக்க முடியும்? மத்தியில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதற்கு காலம் பதில் சொல்லும். அப்போது யார் மந்திரியாக இருப்பார்கள். யார் வெளியேறுவார்கள் என்பது தெரிய வரும்' என்று பிரணாப் முகர்ஜிக்கு பதில் அவர் அளித்தார்.

பிரபாகரனை நாட்டு மக்கள் ஒரு போதும் மன்னிக்கமாட்டார்கள்: பிரியங்கா

பிரபாகரனை நாட்டு மக்கள் ஒரு போதும் மன்னிக்கமாட்டார்கள் என்று பிரியங்கா தெரிவித்துள்ளார். உத்திர பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் தனது சகோதரர் ராகுலுக்காக தீவிர பிரசாரம் செய்தார் பிரியங்கா. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "முன்னாள் பிரதமர் ராஜிவை கொலை செய்த பிரபாகரனை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்' என, பிரியங்கா கூறியுள்ளார். எனினும் தனிப்பட்ட முறையில் பிரபாகரன் மீது தனக்கும் தமது குடும்பத்திற்கும் எவ்வித கோபமும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.


இந்த நிமிடம் தவறினால் தமிழினத்தை காக்க முடியாமலே போய்விடும்: டாக்டர் ராமதாஸ்

இந்த நிமிடம் தவறினால் தமிழினத்தை காக்க முடியாமலே போய்விடும். இலங்கை தமிழினம் பேரழிவை சந்திப்பதற்கு முன்னர் ஒட்டுமொத்த தமிழர்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரிட்டன் கோரிக்கை: இலங்கை நிராகரிப்பு

"விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது என்பது அவசியமற்றது' என, பிரிட்டன் அரசுக்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷே பதிலளித்துள்ளார். இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன், அதிபர் ராஜபக்ஷேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, முல்லைத் தீவில் ராணுவ தாக்குதலை நிறுத்தும்படி வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த அதிபர் ராஜபக்ஷே, "புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது என்பது அவசியமற்றது. பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்தப் பின், பிரச்னைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்படும். மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொடுக்கும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சி ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளது' என, உறுதியளித்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காஷ்மீரில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்; 5 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் நகரில் உள்ள ராணுவ மையத்திற்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு டிரக் வண்டி சென்றது. பாபியாஸ் பள்ளத்தாக்கு பகுதியில் அந்த டிரக் சென்றபோது தீவிரவாதிகள் அதை வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். இதில் அந்த டிரக் வெடித்துச் சிதறியதுடன் பல தடவை உருண்டு பள்ளத்தாக்கிற்குள் விழுந்தது. இந்த சம்பவத்தில் டிரக்கில் இருந்த 5 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயமடைந்தார்கள். காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர்.

ஐ.பி.எல்.,டுவென்டி20:கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி 11ரன்னில் வெற்றி

ஐ.பி.எல்.,டுவென்டி20 கிரிக்கெட் தொடரின் 6வது போட்டியில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகிறது. டாஸ் வென்ற கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பீல்டிங் தேர்வுசெய்தது. முதலில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன் எடுத்தது. 159 ரன் எடுத்தால் வெற்றி என்ற அடிப்படையில் அடுத்து களமிறங்கிய கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி 9.2 ஓவரில் 1விக்கெட் இழப்பிற்கு 79 ரன் எடுத்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் டக்வொர்த் லிவிஸ் படி ‌கோல்கட்டா நைட் ‌ரைடர்ஸ் அணி ‌11 ரன்னில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கெய்ல் அதிரடியால்(44) ஆட்டநாயனாக அறிவிக்கப்பட்டார்.

இலங்கை தமிழர் மீதான தாக்குதல்உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் நமது முழக்கம்: ஜெயலலிதா

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கையில் பாதுகாப்பு வளையத்தில் சிக்கி இருக்கும் தமிழர்கள் அனைவரையும் இலங்கை ராணுவம் மிருக வெறி கொண்டு தாக்கி வருகிறது. தப்பி ஓடுபவர்களை எல்லாம் இலங்கை ராணுவம் விரட்டி அடித்துக் கொல்கிறது. அங்கே தமிழ் இனமே அழிந்து கொண்டிருப்பதாக கவலை அளிக்கும் செய்தி நாள்தோறும் வந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற இனப்படுகொலை உலகத்தில் எங்குமே நிகழ்ந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், தெளிவான முடிவை முதல்-அமைச்சர் கருணாநிதி தைரியமாக எடுக்காமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உலகெங்கும் வாழும் தமிழர்கள், இலங்கை தமிழர்களுக்காக தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து கொண்டிருக்கின்றனர். பல நாடுகளில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும் நடைபெற்று வருகின்றன.இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பது தான் இந்த நிமிடத்தில் நமது ஒரே முழக்கம் இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

விருதுநகரில் மழைக்கு மூன்று பேர் பலி

விருதுநகரில் மழைக்கு மூன்று பேர் பலியானார்கள். விருதுநகரில் பெய்த திடீர் மழையால் திருச்சுழி பகுதியை சார்ந்த பால்காரர் மணியன் என்பவர் மின்னல் தாக்கி பலியானார். இதேபோல் வத்திராயிருப்பு நெடுங்குளம் அருகே மழை மற்றும் பலத்த காற்றால் மரம் சாய்ந்து பஞ்சவர்ணம் என்ற பெண்ணும், மற்றொரு ஆணும் பலியானார்கள்.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம்ரூ.70 லட்சம் கோடியை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

சுவிஸ் வங்கி உள்ளிட்ட பல வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் ரூ.70 லட்சம் கோடியை போட்டு வைத்து இருப்பதாகவும், சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு உள்ள இந்த கறுப்பு பணத்தை மீட்க அந்த வங்கிகளை அணுக வேண்டும் என்றும் பாரதீய ஜனதா தலைவர் அத்வானி மத்திய அரசை வற்புறுத்தி வருகிறார். இதேபோல் இடதுசாரி கட்சிகளும் வற்புறுத்தி வருகின்றன. இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக பிரபல சட்ட நிபுணரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ராம்ஜெத்மலானி, பஞ்சாப் மாநில முன்னாள் `டி.ஜி.பி.` கே.பி.எஸ்.கில் உள்ளிட்ட முக்கிய பிரமுகர் சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். இந்த வழக்கில் மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கி, `செபி' அமைப்பு, அமலாக்கப்பிரிவு இயக்குனரக இயக்குனர், மத்திய நேர்முக வரிகள் வாரிய தலைவர் ஆகியோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று இந்த மனு ஆய்வுக்கு வந்தது. மனு மீது இன்று (புதன்கிழமை) விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.
வாக்காளர்களை ஆசிர்வதிக்கும் ‌சாமியார் வேட்பாளர்

கர்நாடகாவில் உள்ள டும்குர் தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் சாமியார் என்பதால், வாக்காளர்கள் அவரிடம் வந்து ஆசிர்வாதம் பெற்று செல்கின்றனர். பொதுவாக வேட்பாளர்கள் அனைவரும் மக்களிடம் பிரசாரம் செய்து, அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று செல்வார்கள். ஆனால், கெளரிசங்கர் சுவாமி என்ற இந்த வேட்பாளரே, சாமியார் என்பதால் மக்களே அவரிடம் வந்து ஆசிர்வாதம் பெற்று செல்கின்றனர். இதனால் அவர் பிரசாரம் செய்வதும் மிக எளியதாகி விட்டது. இதுகுறித்து அவர் தெரிவிக்கும் போது, அரசியல் என்பது ஒரு சமூக சேவை. அதனால் தான் மக்களுக்கு சேவை செய்யும் ‌விதமாக அரசியலை தேர்ந்தெடுத்து இருக்கிறேன் என தெரிவித்தார்.

இலங்கை தமிழர் மீது கொடூர தாக்குதல்: 24-ந் தேதி கறுப்பு கொடி அஞ்சலி

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கையில் வன்னியின் பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான தமிழர்களை பணயக் கைதிகளாக முன்னிறுத்தி சிங்கள ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். மக்கள் வசிக்கும் பகுதிகளில் தொடர்ந்து கொத்துக் குண்டுகளை வீசி சிங்கள ராணுவம் கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மனித பேரழிவைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு முன் வராததைக் கண்டித்தும், கொல்லப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் வரும் 24-ந் தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை தமிழ்நாடு முழுவதும் கறுப்பு கொடி ஊர்வலங்கள் நடத்த வேண்டும். சரியாக மாலை 6 மணிக்கு அனைவரும் ஒன்றுகூடி அமைதி அஞ்சலி செலுத்த வேண்டும். அமைதி அஞ்சலி செலுத்தும் நேரத்தில் அனைத்து போக்குவரத்தையும் நிறுத்தி, அவரவர்கள் இருந்த இடத்தில் இருந்தும், வீடுகளில் இருப்பவர்கள் வீட்டுக்கு உள்ளேயும் 5 நிமிட நேரம் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அறிக்கையில் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

பீட்டருக்கு எதிராக தீர்மானம்: தென்காசி காங்கிரசில் புயல்

தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வெள்ளைப்பாண்டி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் வாசன் ஆதரவாளர். கடையநல்லூர் எம்.எல்.ஏ.,பீட்டர்அல்போன்சின் முயற்சியில்தான் இவருக்கு சீட் கிடைத்தது. நெல்லை மேற்கு மாவட்ட காங்.,தலைவர் கொடிக்குறிச்சிமுத்தையா. இவர் ஈ.வி.கே.எஸ்.,இளங்கோவன் ஆதரவாளர். பீட்டர் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை கலந்து ஆலோசிக்காமல் தேர்தல் பணிகள் மேற்கொள்வதாகவும், வேட்புமனுதாக்கல் செய்வதற்கு கூட தங்களை அழைக்கவில்லை எனவும் இளங்கோவன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு கொடி பிடிக்க துவங்கியுள்ளனர். தென்காசியில் இளங்கோவன் ஆதரவாளர்கள் நடத்திய கூட்டத்தில், வேட்பாளர் வெள்ளைபாண்டி பீட்டரின் கைப்பாவை போல செயல்படுவதாகவும், கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை கலந்துஆலோசிக்காமல் கட்சி மேலிடம் கொடுத்த பணத்தை செலவழிக்க "வழிகாட்டுதல் குழு' ஒன்றை அமைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்தனர். தென்காசியில் பீட்டர் நடத்த உள்ள காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தையும் தேர்தல் பணிகளையும் புறக்கணிக்கவும் முடிவு செய்தனர். நெல்லையில் காங்கிரஸ் வேட்பாளர் ராமசுப்புவிற்கு எதிராக தனுஷ்கோடிஆதித்தன ஆதரவாளர்கள் களம் இறங்கியுள்ள நிலையில் தென்காசியில் வெள்ளைப்பாண்டிக்கு எதிராக இளங்கோவன் ஆதரவாளர்கள் கண்டன தீர்மானம் போட்டுள்ளதும் இருவரும் இன்னமும் வேட்புமனுதாக்கல் செய்வதற்கு முன்பாகவே கோஷ்டிபூசல் களைக்கட்டியிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments: