Showing posts with label பா.ஜனதா. Show all posts
Showing posts with label பா.ஜனதா. Show all posts

Thursday, December 18, 2008

மத்திய மந்திரி அந்துலேயை நீக்கக் கோரி பாராளுமன்றத்தில் அமளி


புதுடெல்லி, டிச.19-

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலின்போது பலியான தீவிரவாத தடுப்பு படை தலைவர் கார்கரே மரணம் குறித்து சந்தேகம் எழுப்பிய மத்திய மந்திரி அந்துலேயை பதவி நீக்கம் செய்யக்கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

மும்பையில் தீவிரவாதிகள் புகுந்து அட்டகாசம் செய்தபோது, போலீஸ் வேன் ஒன்றையும் கடத்திச் சென்றனர். அப்போது அந்த வேனில் இருந்த தீவிரவாத தடுப்பு படை தலைவர் கார்கரே உட்பட மூன்று போலீஸ் அதிகாரிகளையும், 4 போலீசாரையும் சுட்டுக் கொன்றனர். மாலேகான் குண்டு வெடிப்பில் இந்து பெண் சாமியாருக்கு தொடர்பு இருப்பதை கார்கரே தான் விசாரித்து வந்தார்.

இந்த நிலையில், கார்கரே மரணம் குறித்து மத்திய மந்திரி அந்துலே சர்ச்சையான கருத்துகளை தெரிவித்தார். நேற்று முன்தினம் அவர் அளித்த பேட்டியில், ``முஸ்லிம் அல்லாத தீவிரவாதிகள் குறித்து கார்கரே விசாரித்து வந்தார். எனவே அவர் தீவிரவாதிகள் மற்றும் வேறு யாராலோ கொல்லப்பட்டு இருக்கலாம். அது பற்றி எனக்கு தெரியாது. தாஜ் ஓட்டல், ஓபராய் ஓட்டல், நரிமன் இல்லம் ஆகிய இடங்களுக்கு செல்லாமல் வேறு இடத்துக்கு அவரை போகச்சொன்னது யார்?'' என்று தெரிவித்து இருந்தார்.

அந்துலேயின் இந்த கருத்துகளால் பா.ஜனதா, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக ஆத்திரம் அடைந்தன. அந்த கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள், பாராளுமன்றத்தில் நேற்று இந்த பிரச்சினையை எழுப்பினர்.
சந்தோஷ் கங்வார் (பா.ஜனதா) பேசும்போது, ``மத்திய மந்திரி அந்துலே தெரிவித்த கருத்துகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்றார்.

பா.ஜனதாவை சேர்ந்த யோகி அதியநாத், `மத்திய மந்திரியாக இருக்கும் ஒருவர் பொறுப்பற்ற முறையில் பேசி இருப்பதாக கூறினார். மேலும் அந்துலே குறித்து சில விமர்சனங்களை தெரிவித்தார். உடனே, சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி குறுக்கிட்டு அவரை கண்டித்ததுடன் அதியநாத் கூறிய வார்த்தைகளையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து அனந்த குமார் உள்ளிட்ட பா.ஜனதா எம்.பி.க்களும் ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.பி.க்களும் அந்துலேக்கு எதிராக கோஷமிட்டனர். பதிலுக்கு காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மத்தியில் இருந்தும் எதிர்ப்பு கோஷங்கள் எழுந்தது. இதனால் பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது. அமளி நடந்தபோது மந்திரிகள் வரிசையில் புன்சிரிப்புடன் அந்துலே அமர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வயலார் ரவி, ``தன்னுடைய கருத்துக்கு அந்துலே ஏற்கனவே விளக்கம் அளித்து விட்டார். தீவிரவாதிகள் தான் கார்கரேயை கொன்றதாக கூறி இருக்கிறார்'' என்றார்.

உடனே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் அவையின் மையப்பகுதிக்கு வந்தனர். இதையடுத்து, ``அந்துலேயிடம் இருந்து அரசு சார்பில் விளக்க அறிக்கை கேட்கப்படும்'' என்று வயலார் ரவி கூறினார்.

டெல்லி மேல்-சபையிலும் இந்த பிரச்சினை எதிரொலித்தது. கேள்வி நேரம் முடிந்ததும் பா.ஜனதா மூத்த தலைவர் அலுவாலியா எழுந்து, ``மூத்த மந்திரி ஒருவர், பொறுப்பற்ற முறையில் பேசி இருக்கிறார். இந்த விவகாரம் குறித்து உடனடியாக விவாதம் நடத்த வேண்டும்'' என்றார்.

அவருக்கு ஆதரவாக பா.ஜனதா, சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் வலியுறுத்தினர். உடனே மேல்-சபை துணைத் தலைவர் ரகுமான்கான் குறுக்கிட்டு, அந்த விஷயம் குறித்து நாளை (இன்று) விவாதம் நடத்தலாம் என்று கூறினார்.

Monday, December 8, 2008

டெல்லி, ராஜஸ்தான், மிசோரம் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது


டெல்லி, மிசோரம் ஆகிய 2 மாநிலங்களில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. ராஜஸ்தானில் சுயேச்சைகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கார் ஆகிய மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆட்சியை தக்க வைத்துக்கொண்டு உள்ளது.
புதுடெல்லி, டிச.9-
ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், மிசோரம் ஆகிய மாநில சட்டசபைகளுக்கு பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் நடைபெற இருக்கும் பாராளுமன்றத்துக்கு தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த 5 மாநில சட்டசபை தேர்தல்கள் கருதப்பட்டன.
5 மாநில சட்டசபை தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் நேற்று எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்தன.
மொத்தம் உள்ள 5 மாநிலங்களில் டெல்லி, மிசோரம் ஆகிய 2 மாநிலங்களில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.
ராஜஸ்தானில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கும் காங்கிரஸ் சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கார் ஆகிய 2 மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆட்சியை பிடித்து இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி வசுந்தராராஜே சிந்தியா தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த தேர்தலில் அங்கு எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. என்றாலும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பாரதீய ஜனதா ஆட்சியை இழந்து விட்டது.
பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இதில் காங்கிரஸ் கட்சிக்கு 96 இடங்கள் கிடைத்தன. ஆளும் கட்சியான பாரதீய ஜனதா 78 இடங்களில் வெற்றி பெற்றது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 6 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்னிஸ்டு கட்சிக்கு 3 இடங்களும், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதாதளம், லோக்தந்திரிக் சமாஜ்வாடி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் கிடைத்தன. சுயேச்சைகள் 14 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
காங்கிரஸ் ஆட்சி அமைக்க இன்னும் 5 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்த கட்சி சுயேச்சைகளின் ஆதரவுடன் மந்திரி சபை அமைக்கிறது.

ஜல்ரபதான் தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி வசுந்தரா ராஜே வெற்றி பெற்றார். தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக கூறிய அவர், பாரதீய ஜனதா ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
பின்னர் அவர் கவர்னர் மாளிகைக்கு சென்று, கவர்னர் எஸ்.கே.சிங்கை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
ராஜஸ்தான் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றவர்களில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் சர்தார்புரா தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.

டெல்லியில் முதல்-மந்திரி ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. இங்கு காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டு உள்ளது.
டெல்லியில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 69 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் காங்கிரசுக்கு 42 இடங்களும், எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவுக்கு 23 தொகுதிகளும் கிடைத்தன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்திய தேசிய லோக்தளம், லோக் ஜனசக்தி கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடங்கள் கிடைத்தன.

காங்கிரஸ் சார்பில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி ஷீலா தீட்சித் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 3-வது முறையாக டெல்லி முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார்.
பாரதீய ஜனதா சார்பில் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வி.கே.மல்கோத்ரா தான் கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் வெற்றி பெற்றார்.

வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில், மிசோ தேசிய முன்னணியிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை பறித்துக் கொண்டது. அங்கு காங்கிரஸ் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது.
40 உறுப்பினர்களை கொண்ட மிசோரம் சட்டசபைக்கு நடந்த தேர்தலில், காங்கிரஸ் 32 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் மிசோ தேசிய முன்னணிக்கு வெறும் 3 இடங்கள் மட்டுமே கிடைத்தன. மிசோ மக்கள் மாநாடு 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மற்ற தொகுதிகளில் சிறிய கட்சிகள் வெற்றி பெற்றன.

2 தொகுதிகளில் போட்டியிட்ட முதல்-மந்திரியும் மிசோ தேசிய முன்னணியின் தலைவருமான சோரம்தங்கா தோல்வி அடைந்தார்.
மிசோரம் மாநிலத்தில் ஏற்கனவே 3 முறை முதல்-மந்திரியாக இருந்தவரும் மாநிலகாங்கிரஸ் தலைவருமான லால்தன்ஹாவ்லா மீண்டும் முதல்-மந்திரி ஆகிறார்.


மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டு உள்ளது.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் ஆளும் பாரதீய ஜனதா 144 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 70 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 6 இடங்களும், உமா பாரதியின் பாரதீய ஜனசக்தி கட்சிக்கு 5 இடங்களும் இதர கட்சிகளுக்கு 5 இடங்களும் கிடைத்தன.
புத்னி சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் ராஜ்புத்தை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் போபால் நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) கூடி சட்டசபை பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக (முதல்-மந்திரி) சிவராஜ் சிங் சவுகானை தேர்ந்து எடுக்கிறார்கள். எனவே அவர் மீண்டும் மத்திய பிரதேச முதல்-மந்தியாக பதவி ஏற்கிறார்.

சத்தீஸ்கார் மாநிலத்திலும் பாரதீய ஜனதா ஆட்சியை தக்க வைத்துக் கொண்டு உள்ளது. இங்கு அந்த கட்சியைச் சேர்ந்த ராமன் சிங் முதல்-மந்திரியாக இருக்கிறார்.
90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஸ்கார் சட்டசபைக்கு நடந்த தேர்தலில், ஆளும் பாரதீய ஜனதா 50 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு 38 இடங்கள் கிடைத்தன. பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
ராஜ்நந்தகோன் தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி ராமன் சிங் வெற்றி பெற்றார். காங்கிரஸ் சார்பில் மார்வாகி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்-மந்திரி அஜித் ஜோகியும் வெற்றி பெற்றார்.
புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ராய்ப்பூர் நகரில் இன்று கூடி ராமன் சிங்கை முதல்-மந்திரியாக தேர்ந்து எடுக்கிறார்கள். எனவே அவர் 2-வது முறையாக சத்தீஸ்கார் முதல்-மந்திரியாக வருகிற 12-ந் தேதி பதவி ஏற்க இருக்கிறார்.

இந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் அடுத்து வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுவதால், அரசியல் கட்சிகள் வெற்றி-தோல்வியை மதிப்பீடு செய்வதில் மும்முரமாக உள்ளன.
இந்த தேர்தல் முடிவுகளை பாடமாகவும் அடிப்படையாகவும் கொண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான உத்திகளை கட்சிகள் வகுக்கும் என்று கருதப்படுகிறது.