Showing posts with label சோனியா. Show all posts
Showing posts with label சோனியா. Show all posts

Tuesday, December 30, 2008

காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி!.


புதுடில்லி :

காஷ்மீரில் சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தேசிய மாநாட்டுக் கட்சி 28 இடங்களை கைபற்றியது. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு இரு தினங்களுக்குப் பிறகு, இன்று காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து டில்லியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.


டில்லியில் பிரதமர் இல்லத்தில் அவசர கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியாவை உமர் அப்துல்லா சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு, காங்கிரஸ் ஒரு மனதாக, காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஆதரவு அளித்து கூட்டணி ஆட்சி நடத்த ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் தேசிய மாநாட்டுக் கட்சியின் முதல்வர் வேட்பாளர் உமர் அப்துல்லாவை‌ முதல்வராக ஏற்றுக்கொள்ளவும் சம்மதம் தெரிவித்துள்ளது.


ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் சைபுதீன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உமர் அப்துல்லா காஷ்மீருக்கு ஒரு நல்ல முதல்வராக இருப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.

Sunday, December 28, 2008

"காஷ்மீர் தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை" - ஜனநாயகம் வெற்றி !.




ஸ்ரீநகர், டிச.29-

காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால், காங்கிரஸ் கட்சியும், முப்தி முகமது சயீது தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. கடந்த ஆகஸ்டு மாதம், அமர்நாத் நில விவகாரத்தில், காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை மக்கள் ஜனநாயக கட்சி வாபஸ் பெற்றது. இதனால் அரசு கவிழ்ந்தது. சட்டசபை கலைக்கப்பட்டது.

இதையடுத்து, காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட்டது. தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம் கருதி, 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. நேற்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.

காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 87 தொகுதிகள் உள்ளன. அங்கு ஆட்சி அமைப்பதற்கு குறைந்தபட்சம் 44 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால், எந்த கட்சிக்கும் இந்த மெஜாரிட்டி கிடைக்கவில்லை. உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி, 28 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. மக்கள் ஜனநாயக கட்சி 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், பா.ஜனதா 11 தொகுதிகளிலும், ஜம்மு-காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி, சுயேச்சைகள் உள்ளிட்டோர் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

அமர்நாத் நில விவகாரம் காரணமாக, ஜம்மு பகுதியில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே பா.ஜனதா வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் முக்கிய தலைவர்கள் அனைவருமே வெற்றி பெற்றுள்ளனர். போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார். அவரது மகன் உமர் அப்துல்லா, முன்னாள் முதல்-மந்திரி முப்தி முகமது சயீது, அவரது மகள் மெகபூபா முப்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்-மந்திரி குலாம்நபி ஆசாத், மாநில பா.ஜனதா தலைவர் அசோக் கஜரியா, மார்க்சிஸ்ட் கம்யு னிஸ்டு கட்சி மூத்த தலைவர் முகமது யூஉசுப் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.


தேர்தலில் அதிக இடங்களில் வென்ற தேசிய மாநாட்டு கட்சி, கூட்டணி ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது. காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா கூறினார். பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். பா.ஜனதாவுடன் கூட்டு சேருவதை விட, எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இத்தேர்தலில் பரூக் அப்துல்லாவை முதல்-மந்திரி பதவி வேட்பாளராக தேசிய மாநாட்டு கட்சி அறிவித்திருந்தது. ஆனால் தற்போது எம்.பி.யாக உள்ள பரூக் அப்துல்லா, எம்.பி.யாக நீடிப்பதையே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். எனவே, அவரது மகன் உமர் அப்துல்லா, முதல்-மந்திரி ஆவார் என்று தெரிகிறது. இதுபற்றி உமர் அப்துல்லாவிடம் கேட்டபோது, யார் முதல்-மந்திரி? என்று பின்னர் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

தேசிய மாநாட்டு கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சியும் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் கட்சிகள். ஆகவே, அவை இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. அதை விட்டால், தேசிய மாநாட்டு கட்சியும், காங்கிரசும் இணைந்தால்தான் மெஜாரிட்டி பலம் கிடைக்கும். எனவே, காங்கிரஸ் ஆதரவைப் பெற தேசிய மாநாட்டு கட்சி முயன்று வருகிறது.

ஆனால், தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆதரவு அளிப்பது பற்றி காங்கிரஸ் கட்சி எதுவும் கூறவில்லை. இதுபற்றி விவாதிப்பதற்காக, பிரதமர் மன்மோகன்சிங் இல்லத்தில் நேற்று மாலை காங்கிரஸ் மேல்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரிதிவிராஜ் சவான், சோனியாவின் அரசியல் செயலாளர் அகமது படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டம் ஒரு மணி நேரம் நடைபெற்றது. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. காஷ்மீரைச் சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி குலாம்நபி ஆசாத், மத்திய மந்திரி சைபுதின் சோஸ் உள்ளிட்ட அம்மாநில மூத்த தலைவர்களுடன் இன்று சோனியா காந்தி ஆலோசனை நடத்தி, தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆதரவு அளிப்பது பற்றி முடிவு எடுப்பது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதே சமயத்தில், காஷ்மீரில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று பா.ஜனதா அறிவித்துள்ளது.

இதற்கிடையே, காஷ்மீர் தேர்தல் குறித்து பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். டெல்லியில் காங்கிரஸ் ஆண்டு விழா கூட்டத்தில் கலந்து கொண்ட மன்மோகன்சிங், இந்த தேர்தல் ஜனநாயகத்துக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் ஆதரவாக நடத்தப்பட்ட தேர்தல் என்று கூறினார்.

சோனியா காந்தி கூறுகையில், `யார் வெற்றி பெற்றார்கள் என்பது பிரச்சினை அல்ல. காஷ்மீர் மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதுதான் இதில் கவனிக்க வேண்டியது. இதிலிருந்து அண்டை நாடு (பாகிஸ்தான்) பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்' என்றார்.

Monday, December 8, 2008

டெல்லியில் காங்கிரஸ் வெற்றி


புதுடெல்லி,டிச.9-
டெல்லியில் காங்கிரஸ் கட்சி, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஷீலா தீட்சித் மீண்டும் முதல்-மந்திரி ஆகிறார்.

டெல்லி மாநிலத்தில் ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி, கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அங்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது.
இதில் காங்கிரஸ் கட்சி, தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ், ஆட்சியை பறி கொடுக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த எதிர்பார்ப்புகளை பொய் ஆக்கி, காங்கிரஸ் வெற்றி பெற்றது.
டெல்லி மாநிலத்தில் மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 69 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 42 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா 23 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதிகளிலும், லோக்தளம், லோக் ஜனசக்தி ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. டெல்லியில் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெறுவது, இதுவே முதல்முறை ஆகும்.
ஆட்சி அமைப்பதற்கு 35 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே போதுமானது. அதை விட அதிகமான தொகுதிகளை பெற்று, ஆட்சியை காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

முதல்-மந்திரி ஷீலா தீட்சித், புதிதாக உருவாக்கப்பட்ட புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்டார். அவர் 39 ஆயிரத்து 747 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் விஜய் ஜாலி 25,669 ஒட்டுகள் பெற்றார். எனவே, ஷீலா தீட்சித் 14 ஆயிரத்து 78 ஒட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் எம்.எல்.ஏ. ஆவது, இது 3-வது தடவை ஆகும்.
அவரது மந்திரிகள் 6 பேரும் வெற்றி பெற்றனர். பா.ஜனதாவின் முதல்-மந்திரி பதவி வேட்பாளர் வி.கே.மல்கோத்ராவும் வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் கட்சியின் வெற்றிச் செய்தியை அறிந்ததும், டெல்லி மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்தனர். பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர். மேள தாளம் முழங்க ஆடிப்பாடினர். அங்கு வந்த முதல்-மந்திரி ஷீலா தீட்சித், மாநில காங்கிரஸ் தலைவர் ஜே.பி.அகர்வால் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஷீலா தீட்சித், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்தார். அவருக்கு சோனியா பாராட்டு தெரிவித்தார். டெல்லியில் 3-வது முறையாக ஷீலா தீட்சித் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜனதா கட்சி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. பா.ஜனதாவின் தோல்வி எதிர்பாராதது என்றும், இத்தோல்வி பற்றி ஆராயப்படும் என்றும் வி.கே.மல்கோத்ரா கூறினார்.

Thursday, December 4, 2008

பிரணாப் முகர்ஜி கொழும்பு செல்கிறார்


இலங்கையில் போரை நிறுத்துவது பற்றி வலியுறுத்த மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முதல் - அமைச்சர் கருணாநிதி கோரிக்கை விடுத்தார். அதை பிரதமர் ஏற்றுக் கொண்டார்.
சென்னை, டிச.5-
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் குழு டெல்லி சென்றது.

டெல்லியில் கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினார்கள். அப்போது, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமரிடம் மனு கொடுத்தனர். அப்போது மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி உடன் இருந்தார்.

இந்தக் கூட்டத்திற்கு பின் முதல்-அமைச்சர் கருணாநிதியை நிருபர்கள் சந்தித்தனர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி:- இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக பிரதமரிடம் மனு அளித்திருக்கிறீர்கள். என்ன முடிவெடுக்கப்பட்டுள்ளது?
பதில்:- அனைத்துக் கட்சிகளின் சார்பில் மனுவை கொடுத்த பிறகு, அதனை வலியுறுத்தி நானும், அனைத்துக் கட்சித் தலைவர்களில் பலரும் தங்களுடைய கருத்துகளை வெளியிட்டோம். இலங்கையிலே உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை பல கட்சிகளின் தலைவர்கள் பிரதமரிடத்தில் வலியுறுத்திப் பேசினார்கள். அவற்றுக்கெல்லாம் பிரதமரும், வெளியுறவுத் துறை மந்திரி பிரணாப் முகர்ஜியும் விளக்கம் அளித்தார்கள்.
இறுதியாக நான் அனைவர் சார்பிலும் பிரதமரிடத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். இலங்கையிலே நிலைமைகள் சீர்படுவதைப் பற்றி கவனிக்கவும் போரை நிறுத்துவது பற்றி வலியுறுத்துவதற்காகவும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவும் வெளியுறவுத் துறை மந்திரி பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு நேரில் அனுப்பி வைக்க வேண்டுமென்று வலியுறுத்தி கேட்டேன். அதனை ஏற்று, பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி வைக்க பிரதமர் ஒப்புக் கொண்டார்.
பிரணாப் எப்போது இலங்கைக்குச் செல்வார் என்று நான் மீண்டும் குறுக்கிட்டு கேட்டேன். எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் அவர் இலங்கை செல்வார் என்று பிரதமர் உறுதியளித்திருக்கிறார்.

கேள்வி:- சோனியா காந்தியைச் சந்தித்தீர்களா?
பதில்:- அவர்களையும் சந்தித்தேன். என்னுடன் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, என் மகள் கனிமொழி எம்.பி.யும் வந்திருந்தார்கள். சோனியாவிடம் பிரதமரிடம் அளித்த இலங்கைத் தமிழர்களுக்கான பிரச்சினை குறித்த மனுவின் நகலைக் கொடுத்தேன். பிரதமரிடம் பேசிய விவரங்களை குறித்து விளக்கியதோடு, சோனியாவையும் அதிலே கவலை எடுத்து ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.

கேள்வி:- பிரணாப் முகர்ஜி, இலங்கைக்குச் செல்வதால் நிலைமை சாதகமாக இருக்கும் என்று நம்புகிறீர்களா?
பதில்:- சாதகமாக இருக்கவேண்டுமென்று விரும்புகிறோம். நல்ல உள்ளங்களிலிருந்து வருகின்ற பதில் அதுவாகத்தான் இருக்கும்.
கேள்வி:- இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்யக் கூடாது என்று ஏற்கனவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசப்பட்டதே?
பதில்:- அதைப் பற்றி அப்போதும் சொல்லியிருக்கிறேன். இப்போதும் பேசியிருக்கிறேன். அவ்வாறு ஆயுத உதவி செய்யவில்லை என்று சொல்கிறார்கள்.

கேள்வி:- பிரணாப் முகர்ஜி செல்லும் போது தமிழ்ப் பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டுமென்ற கோரிக்கை வைக்கப்படுமா?
பதில்:- அவர்கள் இலங்கைக்குச் செல்ல ஒப்புக் கொண்டுவிட்டார்கள். போகும்போது என்னென்ன செய்ய வேண்டும் என்ற விவரங்களைப் பற்றி பின்னர் தொடர்பு கொண்டு பேசுவார்கள்.
கேள்வி:- பிரதமரோடு நடைபெற்ற சந்திப்பில் திருப்தி இல்லை என்று இந்திய கம்னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தா.பாண்டியன் சொல்லியிருக்கிறாரே?
பதில்:- அது அவருடைய கருத்து.
கேள்வி:- பிரதமரிடம் வலியுறுத்துவது இதுதான் கடைசியானது என்றும் தா.பாண்டியன் சொல்லியிருக்கிறாரே?
பதில்:- நான் அதைப்பற்றி அபிப்பிராயம் சொல்ல விரும்பவில்லை. இலங்கைப் பிரச்சினையில் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று எண்ணுகிறவன் நான். அதனால் நான் இதற்கெல்லாம் பதில் சொல்லி ஒற்றுமையைச் சிதைக்க விரும்பவில்லை.

கேள்வி:- அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க., போன்ற கட்சிகள் இந்தக் கூட்டத்திற்கு வரவில்லையே?
பதில்:- அது அவர்களுடைய உணர்வைக் காட்டுகின்றது.
கேள்வி:- இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வந்த போது, போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பு இல்லை என்று சொல்லியிருக்கிறாரே?
பதில்:- வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கிறேன்.
கேள்வி:- கச்சத் தீவை மீட்பதைப் பற்றி பேசினீர்களா?
பதில்:- கச்சத் தீவை மீட்டே தீருவோம் என்று அம்மையார் கோட்டையிலே கொடியேற்றி விட்டு முழங்கிய முழக்கம் எல்லாம் தமிழக மக்கள் அறிந்த ஒன்று. இதுபோன்ற பிரச்சினைகளில் ஒரு ஒப்பந்தம் போட்டு முடிந்த பிறகு, அந்த ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது பற்றியும், அதை மாற்றுவது என்பது பற்றியும் முடிவெடுப்பது என்பது அகில உலக சட்டப் பிரச்சினைக்கு உட்பட்டது.
கேள்வி:- இலங்கைப் பிரச்சினையில் சில அதிகாரிகள்தான் தவறு செய்கிறார்கள் என்றும், குறிப்பாக அந்தத் துறையின் செயலாளர் சிவசங்கர மேனன், எம்.கே.நாராயணன் போன்றவர்கள்தான் முக்கிய காரணம் என்று வெளிப்படையாக சொல்லப்படுகிறதே?
பதில்:- அவ்வாறு பேசப்பட்டால், அதற்கு பிரதமர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவோமாக.
இவ்வாறு அவர் கூறினார்.