வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவிற்கு, வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.வரும் 20ம் தேதி, அமெரிக்காவின் புதிய அதிபராக பரக் ஒபாமா பதவி ஏற்கிறார்.
அமெரிக்க அரசியலில் முதல் முறையாக கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் அதிபராக பதவி ஏற்கவுள்ளார். இவரின் பதவியேற்பு விழா, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வெகு சிறப்பாக நடக்கவுள்ளது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விழாவில் 20 லட்சம் பேர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த விழாவிற்காக நகரின் மையப் பகுதியில் 3.5 சதுர கி.மீ., அளவிற்கு தடுப்பு ஏற்படுத்தி பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதிலும் இருந்து 96 பிரிவுகளைச் சேர்ந்த 8,000 அதிகாரிகள் இந்த பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். பொடோமாக் ஆற்றில் உள்ள பாலத்தை மூடி விட்டனர். விர்ஜினியா மாகாணத்தில் இருந்து வரும் பாலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.அதிநவீன ஆயுதங்கள் ஏந்திய பாதுகாப்பு வீரர்கள், குண்டு துளைக்காத கண்ணாடி, வானில் பறந்து கொண்டிருக்கும் பைட்டர் விமானம், ரகசிய கண்காணிப்பு போன்றவை இந்த பாதுகாப்பின் சிறப்பம்சங்கள்.
வாஷிங்டன் நகருக்கு வரும் முக்கிய இரு பாதைகளிலும் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.





இந்நிலையில், விழாவிற்கு வருவோர் ரயிலில் வர வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment