Monday, November 17, 2008

விடுதலைப்புலிகள் ஆவேச பதிலடி தாக்குதல் 38 சிங்கள ராணுவத்தினர் பலி


இலங்கையில் கிளிநொச்சி மீது படையெடுத்துள்ள ராணுவம் மீது விடுதலைப்புலிகள் ஆவேச பதிலடி தாக்குதல் நடத்தினர். முகமாலை பகுதிகளில் மூன்று நாட்களாக நடந்த சண்டையில் 38 ராணுவத்தினர் பலியாகினர். இதற்கிடையே விடுதலைப்புலிகளிடம் இருந்து 2 ஊர்களை பிடித்து விட்டதாக ராணுவம் கூறி உள்ளது.
கொழும்பு, நவ.18-
இலங்கையில் விடுதலைப்புலிகள் வசம் உள்ள கிளிநொச்சியை கைப்பற்ற ராணுவம் முழு வீச்சில் ஈடுபட்டு உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் விடுதலைப்புலிகள் வசம் இருந்த பூநகரி என்ற முக்கியமான கடற்படை தளத்தை கைப்பற்றி விட்டதாக கடந்த சனிக்கிழமை அன்று ராணுவம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து முகமாலையில் கண்டல் பகுதி வழியாக ராணுவத்தின் 55-வது படை பிரிவை சேர்ந்த ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் முன்னேறினர். பீரங்கி குண்டு, ஏவுகணை, ஆட்டிலறி குண்டுகள் போன்ற ஆயுதங்களுடன் தாக்கினர். அவர்களை விடுதலைப்புலிகள் தடுத்து நிறுத்தி கடுமையாக பதிலடி கொடுத்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் பிற்பகல் 12.40 மணி வரை சுமார் 8 மணி நேரத்துக்கு இந்த சண்டை நீடித்தது. இறுதியில், பழைய இடத்துக்கே ராணுவத்தினர் விரட்டி அடிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 80 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் விமானப்படை விமானங்கள் மூலமாக கொண்டு செல்லப்பட்டனர்.
இதுபோல முகமாலையில் கிளாலி பகுதி வழியாகவும் இலங்கை ராணுவத்தின் 53-வது படைப்பிரிவு வீரர்கள் முன்னேறினர். பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக விமானப்படை விமானங்களும் போரில் ஈடுபட்டன. அவர்களை விடுதலைப்புலிகளின் மற்றொரு பிரிவினர் தடுத்து நிறுத்தி தாக்கினர்.

சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய இந்த சண்டை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை நீடித்தது. இந்த சண்டையில் 10 ராணுவ வீரர்கள் பலியாகினர். 30 பேர் காயம் அடைந்தனர். அவர்களை விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் நான்குமுறை வந்து அழைத்துச் சென்றன. இதன் மூலமாக ராணுவத்தின் முன்னேற்றத்தை விடுதலைப்புலிகள் தடுத்து விட்டனர்.
ஆனாலும் கூட, நேற்று (திங்கள்) மூன்றாவது நாளாக ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது. கண்டல் மற்றும் கிளாலி ஆகிய பகுதிகளில் காலை 5 மணி முதல் 11 மணி வரை தீவிரமாக சண்டை நடந்தது. இந்த சண்டையில் 8 சிங்கள ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மேலும் 29 பேர் காயமடைந்தனர். இந்த தகவல்களை விடுதலைப்புலிகள் நேற்று தெரிவித்தனர். எனினும், அவர்கள் தரப்பில் ஏற்பட்ட சேத விபரங்களை வெளியிடவில்லை.

இது தவிர கண்டல் மற்றும் கிளாலி ஆகிய இடங்கள் தவிர பழை, இயக்கச்சி, கிழக்கு வடமராச்சி, முகமாலை ஆகிய பகுதிகளை இலக்காக கொண்டு ராணுவம் தீவிரமாக போரிட்டு வருகிறது. தரைப்படைக்கு சிக்கல் இல்லாமல் இருப்பதற்காக இலங்கை விமானப்படையினர் குண்டுகளை வீசி பாதை அமைத்துக் கொடுக்கின்றனர்.
அதே வேளையில், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைக் கோட்டுக்குள் ழையும் ராணுவத்தை விடுதலைப்புலிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். ராணுவத்துடன் நடைபெறும் போருக்கு ஜெர்ரி, முகுந்தன், கடல்பரிதி, புகழேந்தி, செந்தீர் ஆகிய விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் தலைமையேற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே, முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளிடம் இருந்து இரண்டு நகரங்களை கைப்பற்றி விட்டதாக இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் கெஹலியா ரம்புக்வெல்லா நேற்று தெரிவித்தார். கிளிநொச்சியில் இருந்து 30 கி.மீ. தெற்கே உள்ள மாங்குளம் என்ற நகரை நேற்று காலையில் இலங்கையின் அதி விரைவுப் படையின் மூன்றாவது பிரிவினர் கைப்பற்றினர்.
முல்லைத் தீவு மாவட்டத்தில் மாங்குளம் நகரம் உள்ளது. இந்த நகரில் இருந்து விடுதலைப்புலிகளின் முக்கிய தளமான ஒட்டுசூடான் நகருக்கு செல்லும் சாலையையும் ராணுவத்தினர் துண்டித்தனர். முல்லைத் தீவு மற்றும் வவுனியா இடையிலான தொடர்பை துண்டிக்கும் நடவடிக்கையிலும் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
9 ஆண்டுகளுக்கு முன் விடுதலைப்புலிகளிடம் இழந்த மாங்குளத்தை மீண்டும் கைப்பற்றியது குறித்து ரம்புக்வெல்லா மகிழ்ச்சி தெரிவித்தார்.

இதுபோல, முல்லைத்தீவு அருகில் உள்ள குமலமுனை என்ற சிறிய நகரையும் ராணுவம் நேற்று கைப்பற்றியது. இந்த இரண்டு நகரங்களையும் கைப்பற்றுவதற்கு ஹெலிகாப்டர்களுடன் கூடிய போர்க் கப்பல்களும் ராணுவத்துக்கு உதவி செய்தன. இந்த சண்டையில் விடுதலைப்புலிகள் தரப்பில் 10 பேர் பலியானதாக ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால், ராணுவம் தரப்பில் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியிடப்படவில்லை.
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் தொடர்ந்து தீவிர தாக்குதல் நடந்து வருகிறது. கடுமையான போர் நடைபெற்று வரும் அந்த பகுதிகளில் மட்டும் இரண்டு லட்சத்து 30 ஆயிரம் தமிழர்கள் வசிக்கின்றனர். போர் காரணமாக அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கும் ஐ.நா. சபை மற்றும் சில தொண்டு நிறுவனங்கள், இந்த தகவலை தெரிவித்தன.

No comments: