Wednesday, November 19, 2008

நடிகர் எம்.என்.நம்பியார் மரணம் நடிகர், நடிகைகள் கண்ணீர் அஞ்சலி


பழம்பெரும் வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89. ரஜினிகாந்த் - கமலஹாசன் உள்பட நடிகர், நடிகைகள் நம்பியார் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
சென்னை, நவ.20-
தமிழ் திரைப்பட உலகில் வில்லன் வேடங்களில் கொடி கட்டி பறந்து, ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர், எம்.என்.நம்பியார்.

இரண்டு கண்களையும் உருட்டிக்கொண்டு, கைகளை பிசைந்தபடி அவர் நடிக்கும்போது, சூழ்ச்சி, சதி, கோபம், ஆவேசம், மிரட்டல் என வில்லனுக்குரிய அத்தனை அம்சங்களையும் தனது முகத்தில் கொண்டு வந்து, ரசிகர்களை பயத்தில் மூழ்க வைப்பதில் நம்பியார் தனி முத்திரை பதித்தவர்.
மறைந்த மாபெரும் கலைஞர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் ஆகியோருடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
"எங்க வீட்டு பிள்ளை'', "ஆயிரத்தில் ஒருவன்'', "படகோட்டி'', "திரிசூலம்'', "தில்லானாமோகனாம்பாள்'' போன்ற படங்களில் அவருடைய `வில்லன்' நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.


திரையுலகில் புகை பழக்கம், மது பழக்கம் போன்றவை இல்லாத ஒரு சில நடிகர்களில் எம்.என்.நம்பியாரும் ஒருவர்.
70 வருடங்களாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட 1000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

முதுமை காரணமாக கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி சென்று தனது உடல்நிலையை பரிசோதித்து வந்தார்.
இருதயம், சிறுநீரகம் போன்றவைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நல்ல உடல்நிலையுடன் அவர் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தார்கள். 89 வயதாகிவிட்ட முதுமை காரணமாக சமீபகாலமாக அவர் தனது ஞாபக சக்தியை இழந்தார்.


நேற்று பகல் 12 மணிக்கு சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் நம்பியார் மதிய உணவு சாப்பிட்டார். 12.30 மணியளவில் அவர் தூங்க ஆரம்பித்தார். பகல் 1 மணிக்கு அவர் திடீரென மரணம் அடைந்தார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.
நம்பியாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, அவருடைய வீட்டில் வைக்கப்பட்டது.

நம்பியார் மரணம் அடைந்த தகவல், சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. தகவல் அறிந்ததும், நடிகர் ரஜினிகாந்த் விரைந்து வந்து நம்பியார் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, "இந்த புண்ணிய ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்'' என்றார்.
ரஜினிகாந்தை தொடர்ந்து, நடிகர்கள் கமலஹாசன், பிரபுதேவா, ஸ்ரீகாந்த், ராதாரவி, செந்தில், எஸ்.வி.சேகர், கரண், ராஜேஷ், நடிகைகள் கே.ஆர்.விஜயா, மனோரமா, விஜயகுமாரி, டைரக்டர்கள் முக்தா சீனிவாசன், சி.வி.ராஜேந்திரன், பி.வாசு, படஅதிபர்கள் ஆர்.பி.சவுத்ரி, எஸ்.ராமநாதன், கே.டி.குஞ்சுமோன், ராம்குமார், ஒளிப்பதிவாளர் டி.என்.சுந்தரம், டான்ஸ்மாஸ்டர் சுந்தரம் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் வந்து நம்பியார் உடலுக்கு மாலை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு பாரதீய ஜனதா தலைவர் இல.கணேசன், தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், போலீஸ் டி.ஜி.பி.(பயிற்சி) விஜயகுமார் ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.


நம்பியாரின் இறுதி சடங்கு இன்று (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது.
அவருடைய உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, பெசன்ட்நகர் மின்சார மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.


நம்பியாருக்கு ருக்குமணி என்ற மனைவியும், சுகுமாரன், மோகன் என்ற 2 மகன்களும், சினேகலதா என்ற மகளும் இருக்கிறார்கள்.
நம்பியாரின் உயிர் பிரியும்போது, அவருடைய மனைவி ருக்குமணி அருகில் இருந்தார். மூத்த மகன் சுகுமாரன் நேற்று முன்தினம் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டார். இளைய மகன் மோகன் கோவை சென்றிருந்தார். மகள் சினேகலதா அவருடைய மகனை பார்ப்பதற்காக அமெரிக்கா போய் இருந்தார். இவர்கள் 3 பேருக்கும் நம்பியார் மரணம் அடைந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் சென்னைக்கு புறப்பட்டார்கள்.
ஜெயலலிதா இரங்கல்
அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
"பழம்பெரும் திரைப்பட நடிகரும், நாடக நடிகரும், தீவிர ஐயப்ப பக்தருமான எம்.என்.நம்பியார் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன்.
ஏராளமான திரைப்படங்களில் நான் அவருடன் இணைந்து நடித்திருக்கிறேன். எல்லோரிடமும் மிகுந்த கலகலப்புடனும், நகைச்சுவை பாங்குடனும் பேசக்கூடியவர். நம்பியாருடன் படிப்பிடிப்பு என்றாலே வேலைப்பளுவும் தெரியாது. பொழுது போவதும் தெரியாது. நம்பியார் என் மீது தனிப்பட்ட முறையில் மிகுந்த அன்பு வைத்திருந்தார்.
நம்பியாரின் இழப்பு திரைப்படத்துறையினருக்கு மட்டுமல்லாமல் ஆன்மீக வாதிகளுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறேன்.'
இவ்வாறு ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
பாரதீய ஜனதா தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் எம்.பி., அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் ஆகியோரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

No comments: