Sunday, November 16, 2008

பூநகரியில் இருந்து பின்வாங்கியது போர் தந்திரம் கிளிநொச்சியை, இலங்கை ராணுவம் கைப்பற்ற விடமாட்டோம் பிரபாகரன் சபதம்


கொழும்பு, நவ.17-
கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்ற விடமாட்டோம் என்று, விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் சபதம் ஏற்றுள்ளார். பூநகரியில் இருந்து பின்வாங்கியது போர் தந்திர நடவடிக்கையே என்றும் அவர் கூறி இருக்கிறார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே உச்ச கட்ட போர் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் முக்கிய கடற்படை தளமான பூநகரியை கைப்பற்றிய ராணுவம், விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகராக விளங்கும் கிளிநொச்சியை நோக்கி முன்னேறி வருகிறது.
இந்த நிலையில், விடுதலைப்புலிகளின் ஆதரவு கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்களான சேனாதிராஜா ஜெனந்த மூர்த்தி மற்றும் சந்திரநேரு ஆகியோர் வன்னிப்பகுதிக்குச் சென்று, தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சந்தித்து பேசினார்கள்.
இந்த சந்திப்பின்போது, கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று, விடுதலைப்புலிகள் சபதம் ஏற்று இருப்பதாக அவர்களிடம் பிரபாகரன் தெரிவித்தார்.

"பூநகரி பிரதேசத்தில் இருந்து பின்வாங்கிச்சென்றது போர் தந்திர உபாயமே. இன்னும் 3 மாதங்களுக்குள் ராணுவத்துக்கு எதிராக மிகப்பெரிய தாக்குதல் முன்னெடுக்கப்படும்'' என்றும் பிரபாகரன் கூறி இருக்கிறார்.
இந்த சந்திப்பு தொடர்பான விவரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஜெனந்த மூர்த்தி வழங்கி இருக்கிறார். இந்த தகவல்கள், கொழும்பில் நேற்று வெளியிடப்பட்டன.

"விடுதலைப்புலிகள் அமைப்பை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. இறுதி போராளி உயிரோடு இருக்கும்வரை போராட்டம் தொடரும் என்றும் ஜெயனந்த மூர்த்தி குறிப்பிட்டு இருக்கிறார்.
"இன்னும் சில மாதங்களில் யுத்தத்தின் கோர விளைவுகளை தெற்கு (தலைநகர் கொழும்பு உள்ளிட்ட சிங்கள பகுதிகள்) சந்திக்க உள்ளது. போர் தொடர்பாக அரசாங்கம் பிழையான வழியில் மக்களை இட்டுச்சென்று இருப்பதை உணரும் காலம் தொலைவில் இல்லை'' என்றும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்
வன்னிப்பகுதி கள நிலைமைகளை பார்வையிட்ட அவர்கள், இடம் பெயர்ந்து கிளிநொச்சியில் அகதிகளாக அவதிப்படும் தமிழ் மக்களையும் அவர்கள் சந்தித்து பேசினார்கள்.

இதற்கிடையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசனும், என்ன விலை கொடுத்தேனும்கிளிநொச்சியை பாதுகாக்க அளித்த பேட்டி ஒன்றில் "என்ன விலை கொடுத்தேனும் கிளிநொச்சியை பாதுகாப்பது என திடமான சபதம் ஏற்று விடுதலைப்புலிகள்போராடி வருவதாக'' தெரிவித்தார். பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது அவர் மேலும் கூறியதாவது-
"சரண் அடைந்தால்தான் போர் நிறுத்தம் என்று ராஜபக்சே கூறுவதை ஏற்க முடியாது. புலிகளின் ஆயுதங்கள் என்பது, தமிழ் மக்களின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் வரை புலிகளின் ஆயுதங்கள்தான் மக்களுக்கான கேடயங்கள்.

தமிழின அழிப்புக்கு எதிராக இந்தியாவில் உருவாகி வரும் உணர்வலைகளை திசை திருப்புவதற்காகவே பிரபாகரன் பிடிபட்டால், விசாரணைக்காக அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைப்போம் என்பது போன்ற கதைகளை ராஜபக்சே கூறி வருகிறார்.
இங்கு நடைபெறும் போரை நிறுத்தி, அமைதியை கொண்டு வரும் ஆற்றல் இந்தியாவுக்கு உண்டு. இனப்படுகொலை மூலம் ஒரு இனம் பூண்டோடு அழிக்கப்படுவதை அயல்நாட்டு விவகாரம் என்று கூறி ஒதுங்கி இருந்து விடலாமா? எது எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் இன எழுச்சியும் அந்த இன எழுச்சிக்கு தலைமை வகித்த தமிழக அரசும் நன்றிக்கு உரியவர்கள்.

"முப்படைகளை வைத்துக்கொண்டு முப்பது வருஷமா யுத்தம் செய்யுறீங்க...உங்களால் அவர்களை (புலிகளை) ஜெயிக்க முடிந்ததா?'' என்று திரையுலகினர் நடத்திய போராட்டத்தின்போது கூறியதன் மூலம், எம்முடைய மண்ணின் கள யதார்த்தத்தை நடிகர் ரஜினிகாந்த் அப்படியே பிரதிபலித்து இருக்கிறார்.
இங்குள்ள ஒவ்வொரு தமிழரும் வீரத்தை வெளிப்படுத்தியபடி, தியாகங்களை புரிந்தபடி போராடி வருகிறார்கள். கடந்த 30 வருடங்களாக எங்களுடைய சுதந்திர தீயை அணையவிடாது பாதுகாத்துக் கொண்டு இருக்கிறோம். எங்களுடைய தியாகங்கள் என்றைக்கும் வீண் போகாது.
தமிழக அரசு தலையிட்ட பிறகு இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளினால் இங்கே எந்த மாற்றமும் நிகழவில்லை. மாறாக, சிங்களப் படையினர் போரை தீவிரப்படுத்தி இருக்கின்றன. தமிழகத்தின் எழுச்சிக்கோ, இந்திய அரசின் முயற்சிக்கோ சிங்கள அரசு செவிசாய்த்ததாக தெரியவில்லை.

வெளிநாட்டு அரசுகளும் திதி அமைப்புகளும் கடந்த காலங்களில் அளித்த பல்வேறு நிதி உதவிகள் எமக்கு வந்து சேரவில்லை. ஈழத்தமிழர் இடர் நிவாரண பணிக்கென எம்முடைய மண்ணிலேயே தமிழர் புனர்வாழ்வு கழகம் என்ற கட்டமைப்பு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.
தமிழக அரசு மத்திய அரசு வழியாக வழங்கும் நிவாரண உதவிகள், இந்த அமைப்பின் வழியாக அனுப்பி வைக்கப்பட்டால்தான் முழுமையாக தமிழ் மக்களை சென்றடையும். அல்லது ஐக்கிய நாடுகள் பொது அமைப்புகள் மூலம் நேரடியாக வன்னிப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு வழங்கப்படவேண்டும்.
மாறாக, தமிழக மக்களின் நிதி சிங்கள அரசின் கைகளுக்குப்போனால், அது பேராயுதங்களாக மாறி ஈழத்தமிழர்களை அழிக்கும் என்பதுதான் உண்மை.''
இவ்வாறு பா.நடேசன் கூறினார்.

No comments: