Friday, November 7, 2008

இலங்கையில் போரை நிறுத்த?:முதல்-அமைச்சர் கருணாநிதி கருத்து

இலங்கையில் போரை நிறுத்த இருதரப்பினரும் முன்வர வேண்டும்கருணாநிதி கருத்து
சென்னை, நவ.8-
இலங்கையில் போரை நிறுத்த இருதரப்பினரும் முன்வர வேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் விவரம்
கேள்வி:- பா.ம.க. தலைவர் கோ.க.மணி கடந்த வாரம் விடுத்த அறிக்கையில் விடுதலைப்புலிகளை தாங்கள் ஆதரிக்கவில்லை, தங்களுக்கும் அவர்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை, அவர்களைப் பார்த்ததே கூட இல்லை என்பதைப் போல கூறி அனைத்து ஏடுகளிலும் வெளிவந்தது. ஆனால் பா.ம.க. நிறுவனத் தலைவர் சேலத்தில் கூறும்போது தமிழ் ஈழம் விடுதலைப்புலிகளால் மட்டுமே முடியும் என்றும், அவர்களை தீவிரவாதிகள் என்ற கோணத்தில் பார்ப்பது சரியல்ல என்றும் சொல்லியிருக்கிறாரே?
பதில்:- விடுதலைப்புலிகள் பற்றி தமிழ்நாட்டிலே உள்ள கட்சிகளிடையே ஒவ்வொரு கட்டத்திலும் முரண்பாடான கருத்துகள் உண்டு. தி.மு.க.வைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் பற்றி ராஜீவ் காந்தி மறைவுக்கு முன் - மறைவுக்குப் பின் என்று இருவேறு விதமான கருத்துக்கள் உண்டு என்பதை நான் இன்றல்ல - ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு பேரவையிலேயே தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன். போர் நிறுத்தம் என்பதிலே கூட- போர் நிறுத்தம் என்பது போரிலே ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பினரும் ஒப்புக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்றாகும். தமிழ்நாட்டிலே உள்ள அனைவரும் போர் நிறுத்தம் செய்யக் கோரி அதைச் செய்யச் சொல்லி இந்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். இரு தரப்பினரின் நிலை தெரியாமல், ஒரு தரப்பை மட்டும் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்று கேட்பது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை. அதனால்தான் இலங்கைப் பிரச்சினை பற்றி பேசும்போதோ, நிலை எடுக்கும்போதோ முரண்பட்ட கருத்துக்கள் எதிரொலிக்கின்றன. எனவே இரு தரப்பினரும் இன்று ஈடுபட்டுள்ள சண்டை ஒத்திவைக்கப்பட்டு - நடுநிலை நாடுகளுடன் இந்தியாவும் ஒப்புக்கொள்ளக் கூடியதான சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு - அதன் இறுதிக்கட்டமாக நிரந்தரப் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பது என் கருத்து.
கேள்வி:- தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன?
பதில்:- அண்ணா முதல்வராக இருந்த போது "சென்னை ராஜ்யம்'' என்ற பெயரை விடுத்து "தமிழ்நாடு'' என்று பெயர் சூட்டியது ஒரு பெருஞ்சாதனை!
அண்ணா காலத்தில் தான் சுயமரியாதைத் திருமணங்கள், சட்டப்படி செல்லுபடியாக்கப்பட்டன.
அண்ணா காலத்தில்தான் கழக ஆட்சியில் "இந்தி மொழி ஆதிக்கம்'' அகற்றப்படவும் - தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழித் திட்டம் அறிவிக்கப்படவுமான நிலை.
அண்ணா மறைவுக்குப்பின் நான் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்திடும் இந்தப் பதினாறு ஆண்டு காலத்தில்;
1. மனிதனை வைத்து மனிதன் இழுத்த கை ரிக்ஷாக்களை ஒழித்து விட்டு; அவற்றுக்கு மாற்றாக அந்தத் தொழிலாளிகளுக்கு இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கப்பட்ட திட்டம்.
2. பட்டிதொட்டி முதல் பட்டிணக்கரை வரையில் பார்வை இழந்தோர்க்கு இலவசக் கண்ணொளி வழங்கும் திட்டம்.
3. பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம்;
4. விவசாயிகளுக்கு - நெசவாளர்களுக்கு - இலவச மின்சாரத் திட்டம்;
5. பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் - வேலையில் 30 சதவிகித ஒதுக்கீடு.
6. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகச் சட்டம்.
7. குடிசை மாற்று வாரியம்;
8. குடிநீர் வாரியம்;
9. ஆதி திராவிடர்க்கு இந்தியாவிலேயே முன் மாதிரியான இலவச வீடுகள் வழங்கும் திட்டம்;
10. மலம் சுமக்கும் துப்புரவு தொழிலாளர் மறு வாழ்வுக்கு மாற்றுத் திட்டம்;
11. பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டு - அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அமைப்பு; பேருந்துகள் கிராமங்களுக்கெல்லாம் செல்ல வழிவகை காணப்பட்டது.
12. உடல் ஊனமுற்றோருக்கு உதவி வழங்க பல்வேறு திட்டங்கள்;
விவசாய கடன் ரத்து
13. விவசாயிகளுக்கு 7000 கோடி ரூபாய் கடன் ரத்து திட்டம் - வட்டி 9 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாகக் குறைப்பு.
14. கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்றாக்கி, தற்போது ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டம்.
15. விலைவாசியைக் கட்டுப்படுத்திட குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள்;
16. காமராஜ் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் என்று சட்டம் - மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் அனைத்தும் ரத்து.
17. சத்துணவில் வாரம் மூன்று முட்டைகள் - வாழைப்பழம் வழங்கும் திட்டம்.
18. புதிய புதிய பல்கலைக்கழகங்கள் - பொறியியல் கல்லூரிகள் - மருத்துவக் கல்லூரிகள்- கலை அறிவியல் கல்லூரிகள்.
19. பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பேருந்து பாஸ்.
20. ஏழை மகளிருக்கு முதுகலைப் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி.
21. சத்துணவு ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம்;
22. பள்ளிகளில் தமிழ் கட்டாயப்பாடம் எனச் சட்டம்.
23. பரிதிமாற் கலைஞரின் கனவு நனவாகி தமிழ் செம்மொழி என அறிவிப்பு;
24. தைத் திங்கள் முதல் நாள் - தமிழ்ப் புத்தாண்டு எனச் சட்டம்.
25. மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய விடுமுறை;
26. ஏழைப் பெண்களின் திருமண உதவிக்கு 20 ஆயிரம் ரூபாய்;
27. கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் நிதியுதவி.
28. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 25 நல வாரியங்கள்.
சுயஉதவிக் குழுக்கள்
29. 50 வயதாகியும் திருமணம் ஆகாத ஏழை மகளிருக்கு மாதம் 400 ரூபாய் வழங்கும் திட்டம்.
30. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் - சுழல் நிதி உதவிகள்
31. அதைப்போலவே இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் சுயஉதவிக் குழுக்கள்;
32. தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லா வீடுகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்;
33. எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள்;
34. பெரியார் நினைவு சமத்துவபுர திட்டம்.
35. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்.
36. நமக்கு நாமே திட்டம்.
37. ராமநாதபுரம், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டங்கள்.
38. திருச்சியில் உய்யகொண்டான் - சேலத்தில் திருமணிமுத்தாறு சீரமைப்புத் திட்டங்கள்
39. மாநிலத்திற்குள் நதிகளை இணைக்கும் மாபெரும் திட்டம்;
40. நகராட்சிகள் அனைத்திலும் பாதாளச் சாக்கடைத் திட்டம்.41. சென்னை மாநகருக்கு மெட்ரோ ரெயில் திட்டம்.
42. சென்னை மாநகரில் விளம்பரப் பலகைகளை அகற்றி சிங்காரச் சென்னையாக்கிய திட்டம்.
43. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்.
44. கட்டணத்தை உயர்த்தாமல் பத்தாயிரம் புதிய பேருந்துகள்.
45. புதிய சட்டமன்ற வளாகம் - தலைமைச் செயலகம்.
46. உலகத் தரத்தில் அரசு நவீன நூலகம்
47. உழவர் சந்தைத் திட்டம்.
48. வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு உதவி நிதித் திட்டம்.
49. வேலை நியமனத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு அரசு துறைகளில் புதிதாக 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு.
50. 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட புதிய காவலர்கள் நியமனம்.
51. இந்தியாவிலேயே முன்னோடியாக மூன்று காவல் ஆணையங்கள் (போலீஸ் கமிஷன்கள்)
52. வருமுன் காப்போம் திட்டம்.
53. ஏழைச் சிறார் இதய நோய் தீர்க்கும் திட்டம்.54. நிலமற்ற ஏழைகளுக்கு இலவச நிலம்.
55. புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்வோருக்கு வீட்டுமனைப் பட்டா.
56. இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு.
57. கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ரத்து.
58. மிகப் பிற்படுத்தபட்டவர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு.
59. பழங்குடியினருக்கு புதிதாக ஒரு சதவிகித இடஒதுக்கீடு.
60. அரசு அலுவலர்களுக்கு மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையான ஊதியம்.
61. அரசு அலுவலர் இறந்தால் குடும்பப் பாதுகாப்பு நிதி.
62. விடுதலை வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் நினைவகங்கள் - குடும்பங்களுக்கு நிதி உதவிகள்.
63. சென்னையில் வள்ளுவர் கோட்டமும், குமரிமுனையில் 133 அடி உயரத்தில் வள்ளுவருக்குச் சிலையும்.
கேள்வி:- மத்திய மந்திரி ராஜா மீது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்னிஸ்டு கட்சி கோரிக்கை வைத்திருக்கிறதே?
பதில்:- மத்திய மந்திரி ராஜா தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து படித்து உழைத்து பாடுபட்டு படிப்படியாக முன்னேறி இன்று மத்திய அமைச்சரவையில் பணியாற்றி வருகிறார். அவர் அந்தப் பொறுப்பில் இருப்பது ஒரு சிலருக்குத் தான் பிடிக்கவில்லை என்றால் மார்க்சிஸ்ட் கம்னிஸ்ட் கட்சியே விசாரணை கோரியுள்ளது. அந்தத் துறையிலே எடுக்கப்பட்ட அத்தனை நடவடிக்கைகளும் பிரதமரின் ஒப்புதலோடுதான் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ராஜா ஏற்கனவே விளக்கமாகக் கூறியிருக்கிறார். விசாரணை கேட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்னிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரும் - பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கங்களின் ஐக்கிய பேரவை என்ற தொழிற் சங்கத்தின் தலைவரும் - ஐக்கிய கூட்டமைப்பின் அமைப்பாளருமான வி.ஏ.என். நம்பூதிரி என்பவர் இந்த ஸ்பெக்ட்ரம் கொள்கை குறித்து எழுதியுள்ள கடிதத்தில் "பி.எஸ்.என்.எல். சங்கங்களைச் சார்ந்த சில அமைப்பாளர்களின் சார்பில் அரசு பின்பற்றி வரும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் கொள்கை தொடர்பாக சில அய்யப்பாடுகளை எழுப்பி, அவை தமிழ் நாளேடுகளில் வெளிவந்திருப்பது எங்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு பின்பற்றிவரும் தற்போதைய கொள்கைகளிலிருந்து எந்த வித மாற்றத்தையும் நாங்கள் இதிலே காண முடியவில்லை. அரசு எடுத்த முடிவை நாங்கள் முழுதுமாக ஆதரிக்கிறோம். உண்மையில் தகவல் தொடர்பு மந்திரிக்கு; பி.எஸ்.என்.எல். அமைப்பின் எதிர்கால நலன் கருதியும், அதில் பணியாற்றும் அலுவலர்களின் நலன் கருதியும் 3 - ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலமின்றி முன்கூட்டியே ஒதுக்கீடு செய்த தீரமிக்க முடிவிற்காக - எங்களுடைய பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி:- மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பற்றி ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையிலே அவர் ஏற்கனவே தன்னைத்தானே பாராட்டிக் கொண்டார் என்றும், தற்போது பிதற்றலான புள்ளி விவரங்களைக் கூறி வருவதாகவும், பெரிய பொருளாதார மேதை என்று சொல்லக்கூடிய பாரதப் பிரதமரும் - ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படித்த நிதி மந்திரி ப.சிதம்பரமும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறாரே?
பதில்:- ஜெயலலிதா இந்திய நாட்டின் முக்கிய தலைவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்வது என்பது இது முதல் முறையல்ல.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments: