Friday, November 14, 2008

இலங்கை தமிழர்களை காப்பாற்ற பதவியை துறக்க தயாராக இருக்கிறோம் சட்டசபையில் கருணாநிதி உறுதி



இலங்கை தமிழர்களை காப்பாற்ற பதவியை துறக்க தயாராக இருக்கிறோம் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.
சென்னை, நவ.15-
இலங்கை தமிழர் மீது நடக்கும் தாக்குதல் பற்றி தமிழக சட்டசபையில் நேற்று எம்.எல்.ஏ.க்கள் பேசினர்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.), மேட்டூர் ஜி.கே.மணி (பா.ம.க.), மன்னார்குடி சிவபுண்ணியம் (இந்திய கம்னிஸ்டு), தொண்டாமுத்தூர் கண்ணப்பன் (ம.தி.மு.க.), காட்டுமன்னார்கோயில் ரவிக்குமார் (விடுதலைச்சிறுத்தைகள்), வேலூர் ஞானசேகரன் (காங்கிரஸ்) ஆகியோர் காரசாரமாக விவாதித்தனர்.
இவர்களுக்கு பதிலளித்து முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-
கடந்த 12-ந் தேதி இந்த அவையில் ஒரு மனதாக, ஒரே மனதாக ஒரு தீர்மானத்தை தமிழர்களுடைய இனம் காப்பாற்றப்பட, பாதுகாக்கப்பட, உளத் தூய்மையோடு நிறைவேற்றினோம். ஆனால், தமிழர்கள் எப்போதும் எப்படியிருப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக 12-ந் தேதி நாம் காட்டிய ஒற்றுமையை 14-ந் தேதி மறந்து விட்டு இந்த அவையிலே செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அதற்காக நான் உள்ளபடியே வேதனைப்படுகிறேன்.
இந்தியாவில் இலங்கையினுடைய அதிபர் வந்து பிரதமர் மற்றும் மற்ற அமைச்சர்களையும் சந்தித்து வெளியிட்ட கருத்துக்களை பற்றித்தான் எதிர்க்கட்சி தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், தங்களுடைய கருத்துக்களை இங்கே வெளியிட்டனர். இதற்கு "உன்னுடைய பதில் என்ன'' என்று கேட்டனர். எப்படியோ, என்னை டெல்லியிலே இருக்கின்ற ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கின்ற ஒருவனாக பாவித்து உன் பதில் என்ன? என்று கேட்டதற்காக நன்றி. ஆனால், நான் யார்? என்னுடைய உயரம் என்ன? என்பதை அறிந்திருக்கிற காரணத்தால், அந்த உயரத்திற்கு உட்பட்டு பதிலை இங்கே சொல்ல விரும்புகிறேன்.

இலங்கை அதிபர் சொன்ன கருத்தை இந்தியா இதை எப்படி எடுத்துக் கொள்ளப்போகிறது? இந்தியா எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நாம் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்க தொடர்ந்து கடமைப்பட்டிருக்கிறோம். அன்றைக்கு வேகமாக பேச தவறிவிட்ட நம்முடைய எதிர்க்கட்சியினுடைய துணைத்தலைவர், இன்று வேகமாக பேசி, "எப்போது நீங்கள் எல்லாம் ராஜினாமா செய்யப்போகிறீர்கள்?'' என்று கேட்டார். அந்த வேகத்தை நான் பாராட்டுகிறேன்.
தமிழனுக்கு ஒரு தீங்கு வந்தால், அந்த தீங்கை சமாளித்துக் கொண்டு, சகித்துக் கொண்டு நாங்கள் பதவியிலே தான் இருப்போம் என்று சொல்கின்ற அளவிற்கு பதவி வெறியில் இங்கு யாரும் தி.மு.க.வில் இல்லை. அன்றைக்கு நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திலே கலந்து கொண்ட தலைவர்கள் உடைய கட்சிகளிலேயும் இல்லை என்று நான் கருதுகின்றேன்.
ஆனால், அன்றைக்கு நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தை நாங்கள் மாத்திரம்தான் நடைமுறைப்படுத்தி இருக்க முடியும். மேலும் சொல்லப்போனால், பா.ம.க.வினால் அதை நடைமுறைப்படுத்தி இருக்க முடியும். மற்ற கட்சிகள் எல்லாம், தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது ஏற்றுக்கொண்டு அன்றைக்கு அனைத்துக்கட்சி கூட்டம் கலைவதற்கு முன்பே, இதுபற்றி தங்களுடைய தலைமையிடம் கேட்டுத்தான் முடிவெடுக்க முடியும் என்று கூறி விட்டார்கள். அதனால் சற்று தயக்கம் ஏற்பட்டது.
இதற்கிடையே பல நிகழ்ச்சிகள் இலங்கையிலே தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன. இப்போது முடிவாக ராஜபக்சே, ``எங்களுக்கு தீவிரவாதிகளாக இருக்கின்ற விடுதலைப்புலிகளை அடக்குவது, அவர்களை சரணடையச் செய்வதுதான் எங்களது முக்கிய நோக்கம்-குறிக்கோள். அதே நேரத்திலே தமிழர்களை அவர்கள் உலகத்திலே எங்கிருந்தாலும் அந்த தமிழர்களை காப்பாற்றுகின்ற பொறுப்பை நான் தட்டிக்கழிக்க மாட்டேன்'' என்று சுவைபடக் கூறியிருக்கின்றார்.
அதை `சுவைபட' என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், அப்படி சொன்னால் தான் இங்கிருக்கின்ற தமிழர்களை ஏமாற்ற முடியும் என்று அவர் கருதியிருக்கின்றார். இதை மத்திய அரசு தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளும் என்று நான் நம்புகின்றேன்.

ஏனென்றால், அவர் இந்த இலங்கை பிரச்சினையை 2-ஆக பிரித்துக்கொண்டு பேசியிருக்கிறார். தீவிரவாத அமைப்புக்கு, அதாவது விடுதலைப்புலிகளுக்கு தங்களால் ஆதரவு தர முடியாது என்று அவர் கூறியிருக்கிறார். அதே நேரத்திலே, தமிழர்கள் மீது தங்களுடைய படை செல்லாது, தங்கள் ராணுவத்தினுடைய குண்டுகள் பாயாது, அவர்களைத் தாக்க மாட்டோம், தங்கள் சிப்பாய்கள் தமிழர்கள் மீது பாய்ச்சல் நடத்த மாட்டார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இப்போதுதான் மத்திய அரசு மிக எச்சரிக்கையோடு இந்தப் பிரச்சினையைக் கையாள வேண்டும் என்று நான் பணிவன்போடு பிரதமரையும், ஆட்சிக்கு வழிகாட்டும் சோனியாகாந்தியையும் கேட்டுக் கொள்கிறேன். விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று இலங்கை அதிபர் கருதுவாரேயானால் அந்தத் தீவிரவாதிகளை எப்படி அணுக வேண்டும், எப்படி அவர்களை அடக்க வேண்டும் என்பதற்கு வேறு முறைகளை கையாள வேண்டும்.
அதே நேரத்திலே தமிழர்கள் மீது குண்டு மாரிப் பொழிவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். தீவிரவாதிகளாக இருக்கின்ற விடுதலைப்புலிகளோடு, அவர்களை அடக்க, அவர்களை செயல்படாமல் செய்ய என்ன முறைகள் வேண்டுமோ அந்த முறைகளை அவர் கையாளட்டும், அதே நேரத்திலே, தமிழர்கள் மீது ஒரு குண்டு, தமிழர்களின் வீடு மீது ஒரு குண்டு, தமிழர்களின் ஆலயங்களின் மீது, தமிழர்களின் இருப்பிடங்களின் மீது, தமிழர்களின் வீதிகளின் மீது, தமிழர்களின் ஊர்களின் மீது ஒரு குண்டு என்று இலங்கை அரசு மற்றும் இலங்கை ராணுவத்தின் சார்பாக விழக்கூடாது.
அதற்கு ராஜபக்சே உத்தரவாதம் தரத் தயாரா என்றால், தயார் இல்லை. அவர்கள் இலங்கையிலே தமிழர்கள் மீது போடுகின்ற குண்டு, விடுதலைப்புலிகளின் மீதும் போடப்படுகின்ற குண்டுதான். விடுதலைப் புலிகளின் மீது போடுகின்ற குண்டு, தமிழர்களின் மீது போடப்படுகின்ற குண்டுதான். இருவரையும் ஒரு சேர அழிக்கத்தான் இந்த யுத்தத்தை ராஜபக்சே அங்கே நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது நமக்குப் புரியாமல் இல்லை.


அவர் ஏன் அதற்கு கெடு கேட்கிறார்? என்பதும் நமக்கு நன்றாகப் புரிகிறது. இதில் நாம் ஏமாந்து விடக் கூடாது என்று மத்திய அரசுக்கு எடுத்து வைக்கிறேன். ஏனென்றால் அவர்களுக்கு வழி இருக்கின்றது.
இந்தியா சார்பாக இங்கே ஏங்கிக் கொண்டிருக்கின்ற, வேதனையிலே வெந்து கொண்டிருக்கின்ற தமிழர்களின் சார்பாக, நமது பிரதமர், `உங்களுக்கு பிடிக்காதது விடுதலைப்புலிகள்தானே, தீவிரவாதிகள்தானே, எல்லா நாட்டிலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். இந்தியாவிலே இல்லையா? பாகிஸ்தானில் இல்லையா? அமெரிக்காவில் இல்லையா? இங்கிலாந்தில் இல்லையா? தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அங்கெல்லாம் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்று அந்த நாட்டு மக்கள் மீதே குண்டு போட்டுக் கொண்டா இருக்கிறார்கள்? இல்லை' என்று ராஜபக்சேக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
அதை அவர் கேட்க வேண்டும். கேட்காவிட்டால், பிறகு என்ன என்பதை யோசிப்போம் என்று அவர் சொல்ல வேண்டும். அவர் சொல்லுகின்ற அந்த பின்னணியில் நாமும் நம்முடைய ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்.
தமிழினத்தைப் பாதுகாக்கும் நம்முடைய எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள என்னென்ன வழிகள் உண்டோ, அவைகளையெல்லாம் நாம் சிந்திக்க வேண்டும். நம்மை பொறுத்தவரையில் அறப்போரிலே மட்டுமே நமக்கு அக்கறை உண்டு. அறப் போராட்டத்திலே நாம் இன்று நேற்றல்ல, பெரியார், அண்ணா, காந்தியடிகள் காலத்திலிருந்து அறப்போர் முறைகளை நாம் அறிந்தவர்கள். அந்தப் போர் முறையிலே ஈழத்தமிழர்களை காப்பாற்ற முடியுமென்றால், அதற்கு நாம் தயாராக இருப்போம். நம்முடைய எதிர்க்கட்சி துணைத்தலைவர் பன்னீர்செல்வம் சொன்னதைப் போல பதவிகளை துறக்கவும் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments: