Sunday, November 23, 2008

இலங்கையில் தமிழன் அமைதியாக வாழ வழிகாண்பதே எனது முதன்மையான, கடைசியான சாதனை : கருணாநிதி


சென்னை, நவ.24-
இலங்கைத் தீவிலே தமிழன் அமைதியாக வாழ ஒரு வழி கண்டாகி விட்டது என்ற அந்தச் செய்தி தான் நான் முதன்மையானதாகவும், கடைசியாகவும் செய்கின்ற சாதனை என்று முதல்-அமைச்சர் கருணாநிதி தெரிவித்தார்.
தமிழக ஆயர்கள் பேரவையின் ஊடகக் குழுவான, சாந்தோம் கலைத் தொடர்பு நிறுவனம், முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை நேற்று வழங்கி கவுரவித்தது. இந்த விருதினையும், பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரத்தையும் பெற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் கருணாநிதி தனது ஏற்புரையில் கூறியதாவது:-

இன்றையதினம் "வாழ்நாள் சாதனையாளர்'' விருது எனக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இந்தச் சாந்தோம் கலை விழா மன்றம் என்னைப் பெருமைப்படுத்தி, ஊக்கத்ததை, உற்சாகத்தை வழங்கியிருக்கின்றது. அதற்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
என்னை சாதனையாளன் என்று குறிப்பிடுவதை விட, நான் பல சோதனைகளைக் கண்டவன் என்ற முறையில் சோதனையாளன் என்றே குறிப்பிடலாம். எனவே சாதனையாளர் விருது இப்போது எனக்கு வேண்டாம், விழாவை ஒத்தி வையுங்கள் என்று நான் கேட்டுக்கொண்டேன்.
அது மாத்திரமல்ல, இப்படிப்பட்ட ஒரு சிறப்பான விழா, தமிழகத் தலைநகரத்தில் நடைபெறும்போது, அதிலே கலந்து கொள்ள என் மனம் ஒப்பவில்லை, அதற்குக் காரணம் விழா நடக்கின்ற இந்த நேரம், நம்முடைய தமிழன் வெட்டப்பட்டு, குத்தப்பட்டு, சுடப்பட்டு இலங்கைத் தீவிலே பிணமாகச் சாய்ந்து கொண்டிருக்கிறான், இந்த நேரத்திலே விழாவிலே கலந்து கொண்டு விருது பெறுவதை நான் சிறப்பாகக் கருதவில்லை, ஆகவே வேறொரு நாளில் வைத்துக் கொள்ளலாம் என்று எவ்வளவோ வேண்டிக் கேட்டுக் கொண்டேன்.

சாதனையாளன் என்பதை நீங்கள் விரும்புகிறவாறு நான் ஏற்றுக்கொண்டாலுங் கூட, என்னுடைய சாதனைகளை வரிசைப்படுத்தித் தொடர்ந்தாலும் கூட, என்னுடைய சாதனை, என்னுடைய உணர்விற்கேற்ப, தமிழர்கள் உண்மையிலேயே வாழ்த்துவதற்கேற்ப அமைந்தது அந்தச் சாதனை என்று சொன்னால், அது இலங்கைத் தீவிலே தமிழன் அமைதியாக வாழ ஒரு வழி கண்டாகி விட்டது என்ற அந்தச் செய்தி தான் நான் முதன்மையானதாகவும், கடைசியாகவும் செய்கின்ற சாதனை என்பதை உங்களுக்கு நான் இந்த நேரத்தில் எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒரு இனமே, பக்கத்திலே இலங்கைத் தீவிலே அழிக்கப்படுகிறது. எந்த இனம்? அங்கே ஆண்ட இனம். எந்த இனம்? ராஜ ராஜ சோழனால் படையெடுக்கப்பட்டு, வெற்றிக்கொடி பறக்க பரிபாலனம் செய்யப்பட்ட அந்த நாட்டில், இன்றைக்கு அவனுடைய இனம் அழிந்து கொண்டிருக்கின்ற அந்தக் காட்சியை காணுகின்றோம், செய்திகளைக் கேள்விப்படுகிறோம்.
அவர்களைக் காப்பாற்ற முடியாமல், காப்பாற்ற நம்முடைய கரத்தை நீட்ட முடியாமல், நம்முடைய நிலை, பரிதாபத்திற்குரியதாக ஆகியிருக்கிறது. இந்த நிலை மாறினால் - மாறித் தீர வேண்டும், மாற்றப்படவேண்டும், மாற்றுவதற்கு எல்லா தமிழர்களும், தமிழகத்திலே உள்ள மக்களும் உலகத்திலே வாழ்கிற தமிழர்களும் ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும், அணி வகுக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் இங்கே வழங்குகின்ற வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு பெருமை, சிறப்பு, பொருத்தம் என்று நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நான் செய்த சாதனையால் ஒரு கோடீஸ்வரர், முன்பு கட்டியிருந்த வீட்டை விட இன்னும் நான்கு மாடி வைத்து வீட்டைக் கட்டியிருக்கிறார் என்றால்- அது என்னுடைய சாதனை அல்ல. எனக்கு ஏற்பட்ட சோதனைகளிலே ஒன்று. நான் அடைகின்ற வேதனைகளிலே ஒன்று. அதல்ல சாதனை.
பொட்டுப் பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய், புழுக்களாய் இந்த உலகத்திலே ஏன் இந்த நாட்டிலே வாழுகின்ற ஏழையெளிய மக்கள், ஊனமுற்ற மக்கள், குருடாகிப் போன மக்கள், ஊமைகளாய் வாழ்கின்ற மக்கள் -அந்த மக்களுக்கெல்லாம் நல்லுயிர் கொடுத்து, நல்வாழ்வளித்து, அவர்களை நடமாடச் செய்வதை விட பெரிய சாதனை ஒன்றும் இருக்க முடியாது என்பதை கிறித்தவ மக்கள் கூடியிருக்கின்ற இந்த இடத்தில் சொல்வதைக் காட்டிலும் வேறு இடம் பொருத்தமாக இருக்க இயலாது.

என்னை ஆளாக்கிய தலைவர், அறிஞர் அண்ணா, 1969-ம் ஆண்டு மறைந்த பிறகு, அந்தப் பொறுப்பு என் மீது திணிக்கப் பட்டு அந்தப் பொறுப்பையேற்று மக்கள் தொண்டனாக - முதல் அமைச்சராக நான் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தில், இந்தியாவிலே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, கண்ணெளி முகாம்கள், கிராமத்திற்கு கிராமம், ஆயிரக் கணக்கான கிராமங்களில் நடத்தப்பட்டு, லட்சக்கணக்கான கண் பார்வை இழந்த மக்களுக்கு கண்ணொளி வழங்கிய நிகழ்ச்சி- கண்ணொளி திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்தத் திட்டம் கூட எப்படி என் சிந்தையிலே உதித்தது என்றால் - நானே விபத்து ஒன்றில் சிக்கி, கண் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த போது - நான் தங்கியிருந்த மருத்துவமனைக்குப் பக்கத்தில் அந்த நாட்டு மருத்துவர்கள் ஒன்று கூடி, பல முனைகளில் ஏழையெளிய மக்களுக்கு கண்ணொளி வழங்குகின்ற திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்ததைக் கண்டேன். வேங்கடசாமி என்ற ஒரு கிறித்தவ நண்பர்தான் என்னோடு வந்த மருத்துவர். அவர் சொன்னார் - இதையே தமிழகத்தில் அரசின் சார்பாக ஏன் நடத்தக் கூடாது என்று கேட்டார். அப்போது நல்வாழ்வுத் துறை அமைச்சராக பேராசிரியர் அன்பழகனார் இருந்தார். அவரோடு கலந்து பேசி நாங்கள் இருவரும் சேர்ந்து தயாரித்த அரசின் திட்டம் தான் கண்ணொளி வழங்கும் திட்டம்.
லட்சக்கணக்கான மக்களுக்கு கண்ணொளி வழங்கிய திட்டம். நீங்கள் சொல்கின்ற சாதனைகளில் முதல் தரமான சாதனையாக அதைச் சேர்த்துக் கொள்ளலாம். இன்றைக்கும் அந்தச் சாதனை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டத்தை தமிழகத்திலே அமைத்து - செங்கற்பட்டிலே - பரணூரிலும், மற்றும் ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரங்களிலும் பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்களை - அதிலும் குறிப்பாக தொழுநோய் பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்கள் தொடங்கப்பட்டு இன்றைக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அது நீங்கள் எண்ணுகின்ற சாதனைகளிலே ஒன்றாக இருக்கக் கூடும்.
சென்னையிலே இருந்த 5000 கை ரிக்ஷாக் களையும், மதுரை, கடலூர் போன்ற இடங்களில் இருந்த கை ரிக்ஷாக் களையும் ஒழித்து விட்டு - அதனை இழுத்தவர்களுக்கெல்லாம் பிழைப்புக்கு வழி காட்டவேண்டுமென்பதற்காக அவர்களுக்கெல்லாம் இலவசமாக சைக்கிள் ரிக்ஷா கொடுத்த ஆட்சி தான் என்னுடைய தலைமையிலே அமைந்த ஆட்சி. இதை வைத்து வேண்டுமானால் நீங்கள் வாழ்நாள் சாதனைகளிலே ஒன்றாக ஆக்கிக் கொள்ளலாம்.
குடிசை மாற்று வாரியம் என்று கண்டு, பல்லாயிரக்கணக்கான குடிசை மாற்று வாரிய வீடுகளை சென்னையிலும், மற்றும் உள்ள நகர்ப்புறங்களிலும் அமைத்து, அந்த குடிசை மாற்று வாரிய வீடுகளிலே நம்முடைய ஏழையெளிய மக்களை குடி அமர்த்தியதும் நம்முடைய ஆட்சி தான்.
ஆனால் இந்தச் சாதனைகளுக்கெல்லாம் மேலான சாதனை தான் வயிறு ஒட்டியவனை வாழ வைக்கின்ற சாதனை. விழியற்றவனை பார்க்க வைக்கின்ற சாதனை. வாய் பேச முடியாத ஊமையை பேச வைக்கின்ற சாதனை.

அந்தச் சாதனைகளின் வரிசையில் இன்னமும் வாய் திறந்திருந்தாலுங்கூட, பேச முடியாத - அழுத்திப் பேச முடியாத - உரிமை இல்லாத - அடிமைத்தனம் மிகுந்த மக்கள் நாட்டிலே இருக்கின்றார்கள். சிறுபான்மை மக்கள் கிறிஸ்தவ மக்கள், இஸ்லாமிய மக்கள் - எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும், எங்களுக்கு கல்வியில் உத்தியோகத்தில் உரிய இடம் தேவை என்று சொல்லி, அவர்கள் கோரிக்கை வைத்ததும், இல்லை யென்று சொல்லாமல், இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவிகிதம், கிறித்தவர்களுக்கு 3.5 சதவிகிதம் என்று இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
பத்து நாளைக்குப் பிறகு திரும்ப வந்து பீட்டரும், சின்னதுரையும் ஏற்கனவே எங்களுக்கு இந்த உரிமைகள் எல்லாம் கிடைத்திருக்கின்றன, இன்னமும் கிடைக்கவிருக்கின்றன, நீங்கள் அளித்துள்ள சலுகையினால் எங்களுக்கு நன்மை இல்லாவிட்டாலும் தீமை வராமல் இருக்க வேண்டுமல்லவா? ஆகவே இந்தச் சலுகையை நீங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்கள். கணக்கிட்டுப் பார்த்தோம், சிந்தித்துப் பார்த்தோம், விவாதித்துப் பார்த்தோம். அவசரப்படவில்லை, ஒரு நாள், இரண்டு நாள் விவாதித்து அதற்குப் பிறகு பீட்டரும், சின்னதுரையும் மாத்திரம் சொன்னால் போதாதென்று, ஆயர் பெருமக்கள் அனைவரையும் அழைத்து பேசினோம். அவர்கள் யாருக்காவது மாறுபட்ட கருத்து இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள விசாரித்தோம். ஒருவருக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும், அதை மீறி நான் நடக்க முடியாது என்ற காரணத்தால், அத்தனை பேருடைய எண்ணத்தையும் அறிந்து இன்றுள்ள, அதே பழைய நிலையிலேயே அவர்களை 3.5 சதவிகிதம் என்ற அந்தச் சலுகையைத் திரும்பப் பெற்று, பழைய நிலையிலேயே அவர்களை வைத்திருக்கிறோம். கடைசியாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

அருந்ததியர் சமுதாயம் தங்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டுமென்று கேட்டார்கள். அதற்காக நீதியரசர் ஜனார்த்தனம் குழு அமைக்கப்பட்டு அது குறித்த அறிக்கையைத் தந்திருக்கிறார். அந்த அறிக்கையை இன்னும் இரண்டொரு நாளில் கூடுகின்ற எங்களுடைய அமைச்சரவை கூட்டத்திலே ஆலோசித்து, விவாதித்து, அந்தச் சமுதாயத்திற்குத் தேவையான அருந்ததியர் சமுதாயத்திற்குத் தேவையான சலுகையை இந்த அரசு அளிக்கவிருக்கிறது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு செயலாளர்கள் என்னிடம் பேசும்போது, இப்போதே இதைச் செய்ய வேண்டுமா என்றார்கள். அப்போது நான் சொன்னேன். கீழான மக்கள், கேவலப்படுத்தப்படும் மக்கள், புழுக்களாய் நெளிந்து கொண்டிருக்கின்ற மக்கள், மனிதனைப் பார்த்து மனிதனே மதிக்காத அளவிற்கு மட்டரகமாக ஆக்கப் பட்ட மக்கள் - அந்த மக்களைக் கைதூக்கி விடுவது தான் இந்தக் கருணாநிதியின் வேலை. இதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்.
அந்தச் சாதனையிலே - சரித்திரத்திலே இதுவரையில் இடம் பெறாமல் இருப்பது இந்த அருந்ததி மக்களுக்கு நாம் அன்பு காட்டி அவர்களை கை தூக்கி விடாமல் இருப்பது தான் - நான் என்னுடைய சரித்திரத்தில் கடைசியாகவாவது - கடைசிப் பக்கத்தில் எழுத வேண்டிய - அச்சடிக்கப் பட வேண்டிய செய்தி, அருந்ததியர்களுக்கு சமூக நீதி அளித்தேன் என்ற அந்தச் செய்தி இடம் பெற வேண்டுமென்று சொன்னேன். அந்தச் சாதனையும் முற்றுப் பெறவிருக்கிறது.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை பொதுச் செயலாளர் தனிஸ்லாஸ் பெர்ணான்டோ, முதல்-அமைச்சருக்கு விருதினை வழங்கி வாழ்த்தி பேசினார். பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ, மதுரை பேராயர் பீட்டர் பெர்ணான்டோ, ஆயர் டோனி டிவோட்டா, அருட்திரு சின்னதுரை, சென்னை மயிலை பேராயர் சின்னப்பா, `இந்து' ஆசிரியர் என்.ராம் ஆகியோர் பேசினார்கள். அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கவுரவிக்கப்பட்டார். தமிழக அமைச்சர்கள், மத்திய மந்திரிகள் கலந்து கொண்டார்கள்.

No comments: