Sunday, December 21, 2008
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல்!. - இலங்கை வீரர்களால் கைப்பற்றப்பட்ட 2 கிலோ மீட்டர் பகுதி மீட்பு, - ராணுவத்தினர் 60 பேர் பலி!.
கொழும்பு, டிச.22-
இலங்கை யில், ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட 2 கிலோ மீட்டர் பகுதியை, விடுதலைப்புலிகள் மீட்டனர். இதற்காக நடந்த போரில் ராணுவத்தினர் 60 பேர் இறந்தனர். 150 பேர் காயம் அடைந்தனர்.
இலங்கையில், தமிழர் பகுதிகளுக்கு சுயாட்சி வழங்க கோரி வரும் விடுதலைப்புலிகள் மீது, ராணுவத்தினர் போர் புரிந்து வருகிறார்கள். கிளிநொச்சி அருகே உள்ள இரணைமேடு பகுதியில் உள்ள வல்வளைத்தை என்ற இடத்தில், விடுதலைப்புலிகள் வசம் இருந்த 2 கிலோ மீட்டர் பகுதியை, ஏற்கனவே ராணுவத்தினர் கைப்பற்றி இருந்தனர்.
நேற்று காலை இந்த பகுதியில், விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் ராணுவத்தினர் 60 பேர் உயிர் இழந்தனர். 150 பேர் காயம் அடைந்தனர்.
போரில், ராணுவத்தினருக்கு பெரும் உயிரிழப்பு ஏற்பட்டதும், மற்ற வீரர்கள் பின்வாங்கினார்கள். அப்போது அவர்கள் தங்களிடம் இருந்த பெருமளவு ஆயுதங்களை அந்த இடத்திலேயே போட்டு விட்டு ஓடினார்கள்.
இதனால் அந்த பகுதியில், 2 கிலோ மீட்டர் பகுதியை விடுதலைப்புலிகள் மீண்டும் கைப்பற்றினார்கள். போர் களத்தில் ராணுவத்தினர் விட்டுச்சென்ற ஏராளமான ஆயுதங்களையும் விடுதலைப்புலிகள் கைப்பற்றினார்கள்.
போர் களத்தில் சிதறிக்கிடந்த ராணுவத்தினரின் 10 உடல்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றினார்கள். அவற்றை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்க விடுதலைப்புலிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment