Friday, December 19, 2008

"விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பேச்சு" : - சீமான் பேசிய பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர் சென்னையில் கைது!.




சென்னை, டிச.20-

டைரக்டர் சீமான் ஈரோட்டில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் செயலாளர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.


ஈரோட்டில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடத்தி பேசியதாக பிரபல சினிமா டைரக்டர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். அதே குற்றச்சாட்டில் பெரியார் திராவிடர் கழக கட்சியின் பொதுச் செயலாளர் கொளத்தூர் மணியும் கைதாகியுள்ளார். அந்த பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் பொதுச்செயலாளர் மணி அரசன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மணி அரசனின் அலுவலகம் சென்னை தியாகராயநகர் முத்துரங்கன் தெருவில் உள்ளது. தன்னை கைது செய்ய போகிறார்கள் என்ற தகவல் தெரிந்து மணி அரசன் நேற்று மாலை 7 மணியளவில் தயாராக தனது அலுவலகத்தில் காத்திருந்தார்.


அப்போது தியாகராயநகர் உதவி கமிஷனர் கண்ணபிரான் போலீஸ் படையுடன் சென்று மணி அரசனை கைது செய்தார். அவர் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் போலீஸ் ஜீப்பில் ஏறி சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.

மாம்பலம் போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள். ஈரோட்டிலிருந்து போலீசார் வந்து அவரை அழைத்து செல்வார்கள் என்று சென்னை போலீசார் கூறினார்கள்.

No comments: