Thursday, December 25, 2008

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஜெயலலிதா `கேக்' வெட்டி கொண்டாடினார்.!.


சென்னை, டிச.26-

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஜெயலலிதா `கேக்' வெட்டி கொண்டாடினார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவருடைய இல்லத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். விழாவின் முதல் நிகழ்ச்சியாக பாதிரியார் ராஜா பிரபாகரன் ஜெபித்து கிறிஸ்துமஸ் விழாவை தொடங்கி வைத்தார். சர்ச்சில் ஜோசப் வேதப் பகுதியை வாசித்தார்.

அதைத் தொடர்ந்து ``ஒவ்வொரு ஆத்மாவிற்கும் ஏசு'' என்ற பாடகர் குழுவினர் கிறிஸ்துமஸ் சிறப்பு பாடகளை பாடினார்கள். ஆயர் சாமுவேல் சுதாகர் முடிவு ஜெபம் செய்தார். தொடர்ந்து ஜிங்கிள் பெல்ஸ் பாடல் பாடல் இசைக்கப்பட்டது. அதை ஜெயலலிதா ரசித்து கேட்டதுடன் பாடகர் குழுவினருக்கு தமது பாராட்டுதல்களை தெரிவித்து கொண்டார்.

அடுத்தபடியாக, கிறிஸ்துமஸ் தாத்தா, ஜெயலலிதாவுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார். அதேபோல், நிகழ்ச்சிக்கு வந்திருந்த பேராயர்களும், ஆயர்களும், கிறிஸ்தவ சபை மக்களும், பிரமுகர்களும், ஜெயலலிதாவுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

தொடர்ந்து பேராயர் மா.பிரகாஷ், இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் என்.கிறிஸ்துதாஸ் மற்றும் இந்திய தேசிய குடியரசு கட்சியின் நிறுவன தலைவர் சி.அம்பேத்கர் பிரியன் ஆகியோரது ஏற்பாட்டின் பேரில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் கேக்குகளை வெட்டினார்கள்.

நிறைவாக, விழாவுக்கு வந்திருந்த பாடகர் குழுவினர் மற்றும் விருந்தினர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் கேக்குகளை வழங்கி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து தமது மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டார்கள்.


இந்த நிகழ்ச்சியில் பேராயர்கள் ஞானப்பிரகாசம், ஒனேஷிமஸ், அருள்தாஸ் ஆகியோரும் இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சி மற்றும் இந்திய தேசிய குடியரசு கட்சி ஆகியவற்றின் மாநில, மாவட்ட நிர்வாகிகளும், முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

அதே போல அமைப்பு செயலாளர் பி.எச்.பாண்டியன், வக்கீல் பிரிவு செயலாளர் மனோஜ்பாண்டியன், சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் ஏ.ஜஸ்டின் செல்வராஜ், மீனவர் பிரிவு இணை செயலாளர் ஜெனிபர் சந்திரன், ஜெ.சி.டி.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: