Monday, December 29, 2008

கூவத்தில் குழந்தைகள் குளிப்பதை பார்க்க வேண்டும்: தி.நகர் பாலம் திறந்து வைத்து முதல்வர் ஆசை!.


சென்னை, டிச.30-

கூவம் ஆற்றில் பளிங்கு போல் தண்ணீர் ஓடும் வரை எனக்கு நிம்மதி இருக்காது என்று முதல்-அமைச்சர் கருணாநிதி உருக்கமுடன் கூறினார்.

சென்னை தியாகராயநகர் கோபதி நாராயண சாலை (ஜி.என்.செட்டி ரோடு) - திருமலை சாலை சந்திப்பு இடையே ரூ.161/2 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

மத்திய தரைவழி, கப்பல் போக்குவரத்து துறை மந்திரி டி.ஆர்.பாலு, உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டு புதிய மேம்பாலத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மேம்பாலத் திறப்புவிழா நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு வெள்ளம்போல் கூடியிருக்கின்ற உங்களையெல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைவதோடு, பெருமிதமும் கொள்கின்றேன். ஏனென்றால், சென்னை மாநகரத்தைக் காண்போர் அனைவருமே கவலையோடு தெரிவித்துக் கொண்டிருக்கின்ற ஒரு செய்தி போக்குவரத்து நெரிசல். `என்ன, காலையிலே பத்து மணிக்கு வருவதாகச் சொன்னீர்கள்; 12 மணி வரையிலே வரவில்லையே' என்று கேட்டால், `என்ன செய்ய, போக்குவரத்தில் நெரிசல் அப்படி' என்று சமாதானம் சொல்லுகின்ற நிலை இன்னமும் சென்னை மாநகரத்திலே இருப்பதை நம்மால் காண முடிகின்றது.

அந்த நெரிசலைப் போக்குவதற்கு வழி என்ன என்று சிந்திக்கின்ற ஒரு ஆட்சி, சிந்திக்கின்ற ஒரு மாநகராட்சி மன்றம் சென்னையிலே இருக்கின்ற காரணத்தால், அந்த ஆட்சியை நடத்துகின்ற இயக்கம், தி.மு.க. இருக்கின்ற காரணத்தால், அந்த இயக்கத்திற்குத் துணையாக காங்கிரஸ் போன்ற இயக்கங்கள் விளங்குகிற காரணத்தால், அவர்களுடைய துணையோடும், நேர்மையான, நாணயமான, ஊக்கம் மிகுந்த, உற்சாகம் மிகுந்த அதிகாரிகளுடைய துணையாலும், நாம் பாலங்களை, மேம்பாலங்களை சென்னை மாநகரத்திலே அதிகமாக உருவாக்கினால், போக்குவரத்து நெரிசலை ஓரளவிற்குச் சமாளிக்கமுடியும் என்ற முடிவிற்கு வந்தோம்.

அந்த முடிவின்படிதான் இன்றைக்கு இதுவரையிலே இங்கே எடுத்துச் சொல்லப்பட்டதே 76 பாலங்கள் என்றும், அவற்றிலே சிறிய பாலங்களுடைய கணக்கு 26 என்றும், மேம்பாலங்களுடைய கணக்கு 10-க்கும் மேற்பட்டவை என்றும் எடுத்துக்காட்டப்பட்டது. அந்தப் பாலங்கள் எல்லாம், கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு உருவானவை என்பதை யாரும் மறந்திருக்கமுடியாது.

அப்படி உருவான பாலங்களைப் பாராட்டுவதற்குப் பதிலாக, இந்தப் பாலங்களெல்லாம் ஊழல் நிறைந்தவை என்று சொல்லி, பாலங்களைக் கட்டிமுடித்த மறுநாளே அதைக் கட்டுவதற்கு முற்பட்ட ஸ்டாலினையும், அதற்குத் துணைபுரிந்த அரசின் தலைவராக அன்றைக்கு முதல்-அமைச்சராக இருந்த என்னையும், என்னைச் சார்ந்தவர்களையும் கைது செய்தனர்.

மீண்டும் நாம் மக்களுடைய ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்தவுடன், ஸ்டாலின் அப்பொழுது மேயராக இருந்தபோது கட்டிய பாலத்தைவிட அதிகமாக, அந்தத் துறைக்கே அமைச்சராக ஆனபிறகு, இன்னும் அதிகமாகப் பாலங்களை சென்னை மாநகரத்திலே கட்டுகிற நிலைமை ஏற்பட்டு, அந்தப் பாலங்களைக் கட்டிக் கொண்டிருக்கின்றார். அவை மிகச் சிறந்த பாலங்களாக இன்றைக்கு அமைந்திருக்கின்றன.

இன்றைக்குக் காலையில் நம்முடைய தம்பி ஸ்டாலின் ஒரு காலண்டர் தயாரித்து, அதில் 10. 15 படங்கள் நிறைந்த ஒரு தொகுப்பைக் காட்டினார். அந்தத் தொகுப்பில் என்னை மிக மிகக் கவர்ந்த ஒரு படம். அதிலே பல படங்கள் இருந்தன. மிக மிகக் கவர்ந்த ஒரு படம்; ஒரு கோபுரம், அந்தக் கோபுரத்தைச் சுற்றி மதில்சுவர். அந்த மதில் சுவருக்கு அப்பால் ஒரு அருமையான பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட சாலை. ` இது எந்த ஊர்' என்று கேட்டேன். `இது மதுரை மீனாட்சி அம்மன் கோவில்' என்று ஸ்டாலின் சொன்னார்.

`மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரகாரத்தை முன்பு சுற்றும்போது, சாலையெல்லாம் வெறும் மண் சாலையாக அல்லவா இருக்கும். இப்போது வந்துள்ள நம்முடைய மாநகராட்சி மேயருடைய பணி இது' என்று சொன்னார். கண்ணாடியைப் போல இருக்கிறது; கோவிலைச் சுற்றியுள்ள அந்தச் சாலை. நம்முடைய கொள்கைகள் வேறு.
இருந்தாலும்கூட, நம்முடைய நகராட்சி நிர்வாகத்திலே ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு பகுதியும், தூய்மையாக இருக்கவேண்டும்; எடுப்பாக இருக்கவேண்டும்; கவர்ச்சியாக இருக்கவேண்டும்; சுற்றுலாப் பயணிகளைச் சுண்டியிழுக்க வேண்டும். அப்படிப்பட்ட முறையில் நம்முடைய நகரங்களும், நம்முடைய சாலைகளும், நம்முடைய ஊர்களும், நம்முடைய ஊர் நிர்வாகமும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான், நாம் பணியாற்றி வருகின்றோம்.

கிராமங்கள் நகரங்களாகவும், நகரங்கள் மாநகரங்களாகவும் மாறினால்தான், நாம் ஆட்சி நடத்துகிறோம் என்பதற்குப் பொருள். இல்லாவிட்டால், எல்லோரையும் போல நாமும் வந்தோம்; அவர்களைப் போல நாமும் முடிந்தவரையிலே ஆட்சி நடத்தினோம்; அதிகாரிகள் சொன்னதைக் கேட்டோம்; நாம் நினைத்து எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை;

மக்களுக்கென்று எந்த காரியத்தையும் நாம் செய்யவில்லை; மாற்றார் பார்த்துப் பாராட்டுகின்ற அளவிற்கு, மற்ற நாட்டுக்காரர்கள் பார்த்து வியக்கின்ற அளவிற்கு, எந்தக் காரியத்தையும் செய்யவில்லையென்றால், நாம் பதவிக்கு வருவதற்கும், ஏற்கனவே இருந்தவர்கள் பதவியிலே இருந்ததற்கும், எந்த வித வேறுபாடும் கிடையாது.

நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்; நம்முடைய சென்னை ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தது? பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தது? சாலைகள் உண்டா? சாலைகள் ஒழுங்காக இருந்ததுண்டா? இல்லை. இன்றைக்கு எவ்வளவு நேர்த்தியாக சென்னை மாறியிருக்கின்றது. ஆனால், என்னைப் பொறுத்தவரையில் இந்த மாற்றம் போதாது.

இன்னும் நிறைய மாற்றங்கள் தேவை. அதைத்தான் ஸ்டாலின் பேசும்போது குறிப்பிட்டார். இன்னமும் என் தந்தைக்குப் பூரண திருப்தியில்லை என்று சொன்னார், உண்மைதான். கூவம் திருந்துகிற வரையில் எனக்குத் திருப்தி இருக்காது. கூவத்திலே தெளிந்த நீரோடைபோல, பளிங்கு போல தண்ணீர் செல்கிற வரையில், அங்கே நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் குதித்து, நீந்தி விளையாடுவதைப் பார்க்கிற வரையில், எனக்கு நிச்சயமாக நிம்மதி இருக்காது; மகிழ்ச்சி இருக்காது.

ஏனென்றால், நான் கேள்விப்பட்டிருக்கிறேன்; நான் பார்த்ததில்லை. நம்முடைய தந்தையர் காலத்திலே சொல்லியிருக்கிறார்கள்.- `பச்சையப்ப முதலியார் கூவத்திற்கு வந்து குளித்துவிட்டுச் செல்லுவார்; கூவத்திலே பச்சையப்ப முதலியார் இறங்கிக் குளிப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்' என்று. ஆனால், நீங்கள் பச்சையப்பர்களாக ஆகாமுடியாவிட்டாலும், தமிழின்பால், அறிவின்பால், கல்வியின்பால், இச்சையப்பர்களாக ஆகவேண்டும்.

இன்றையதினம் இங்கே திறந்து வைக்கப்பட்டிருக்கின்ற இந்தப் பாலத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தேன். அருகில் அண்ணா மேம்பாலம் இருக்கிறது. கலைவாணர் என்.எஸ்.கே-வினுடைய சிலையை இங்கே அமைத்தவர் அண்ணா. சிறப்பாக அந்த நினைவாகவும், என் தலைமையிலே நடைபெற்ற அந்த விழாவில், அண்ணாவின் வாழ்க்கையில் கடைசி நிகழ்ச்சியாக கலைவாணருடைய சிலையை இந்தச் சாலையிலேதான் திறந்துவைத்தார் என்பதற்காகவும், அந்தச் சாலையை இணைக்கின்ற இந்தப் பாலத்திற்கு "கலைவாணர் மேம்பாலம்'' என்ற பெயரைச் சூட்டுகிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

விழா முடிவடைந்த பின்னர் அவர் காரில் சென்று புதிய மேம்பாலத்தை பார்வையிட்டார்.

No comments: