Monday, December 29, 2008

"இறுதி வரை போராடுவேன்" - "ஒரு போதும் எனது மண்ணைவிட்டு செல்லமாட்டேன்" விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் - பேட்டி!.




கொழும்பு, டிச.30-

ஒரு போதும் எனது மண்ணை விட்டு செல்ல மாட்டேன் என்றும், இறுதி வரை போராடுவேன் என்றும் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கூறியுள்ளார்.

ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு இ-மெயில் மூலம் பிரபாகரன் அளித்துள்ள பேட்டியை கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- உங்கள் பாதுகாப்புக்காக வெளிநாட்டுக்கு செல்லப்போவதாக வதந்திகள் நிலவுகின்றன. உங்கள் சகாக்களை விட்டு விட்டு செல்ல நீங்கள் முயற்சிக்கிறீர்களா?

பதில்:- இவை அனைத்தும் இலங்கை அரசின் ஊடகங்கள் நடத்தும் முற்றிலும் பொய்யான பிரசாரங்கள்தான். நான் ஒருபோதும் எனது மண்ணை விட்டு செல்லமாட்டேன். மக்களின் உரிமைக்காக இறுதி வரை போராடுவேன்.

கேள்வி:- நீங்கள் நாளுக்கு நாள் வயதாகிவருகிறீர்கள். ஆனால் ஈழம் இன்னும் கைகூட வில்லையே?

பதில்:- எமது போராட்டம் ஒரு சுதந்திர போராட்டமாகும். எமது சுதந்திர போராட்டத்திற்கு கால எல்லையோ, வயது எல்லையோ கிடையாது.

கேள்வி:- கிளிநொச்சியை சில தினங்களில் ராணுவம் கைப்பற்றிவிடும் என்ற கருத்து நிலவுகிறதே?

பதில்:- எமது போராட்ட வரலாற்றில் இதை விட பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளுக்கும், இலங்கை அரசின் பிரசாரத்திற்கும் முகம் கொடுத்துள்ளோம். நாம் யாழ்ப்பாணத்தை கைவிட்டு வன்னி பிரதேசத்திற்கு வந்தபோது எம்மால் மீண்டும் ஒருபோதும் பாரம்பரிய ராணுவமாக செயல்பட முடியாது என இலங்கை அரசு பெரும் பிரசாரம் மேற்கொண்டது. ஆனாலும் அதன்பின் ஓயாத அலைகள் 1, 2 மற்றும் 3 மூலம் முல்லைத்தீவு, ஆனையிறவு மற்றும் வன்னியின் பெரும்பகுதியை கைப்பற்றினோம்.

தற்போது நாம் விரைவில் கிளிநொச்சியை இழந்துவிடுவோம் என இலங்கை அரசு பிரசாரம் செய்கிறது. கடந்த சில நாட்களாக கிளிநொச்சியில் நடைபெற்ற மோதல்களில் இலங்கை ராணுவம் சந்தித்த பாரிய இழப்புகள் புலிகளின் எதிர்கால வெற்றியை வெளிப்படுத்துகிறது.

கேள்வி:- உங்களின் பயங்கரவாத செயல்பாடுகளை விரும்பாத காரணத்தால்தான் சர்வதேச சமூகம் உங்களை கைவிட்டுள்ளதா?

பதில்:- எமது போராட்டம் நேர்மையான போராட்டம் என சர்வதேச சமூகம் இப்போது புரிந்து கொண்டுள்ளது. நாம் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.

மக்களை இலக்காக வைத்து விமான குண்டுவீச்சுகளை மேற்கொள்ளும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் பயங்கரவாத நடவடிக்கைகள் இல்லையென்றால் மக்களை பாதுகாப்பதற்காகவும், அவர்களின் உரிமைகளை பெறுவதற்காகவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பயங்கரவாதமாகுமா? என்பதை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி:- கடந்த ஜனாதிபதி தேர்தலை நீங்கள் புறக்கணித்ததன் மூலம் ராஜபக்சேவை ஜனாதிபதி ஆக்கியதை பற்றி தற்போது என்ன நினைக்கிறீர்கள்? அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலரால் உங்கள் இயக்கத்திற்கு பணம் வழங்கப்பட்டதால்தான் நீங்கள் அந்த தேர்தலை புறக்கணித்தீர்கள் என்று கூறப்படுகிறதே?

பதில்:- மக்கள் தாமாகவே தேர்தலை புறக்கணித்தனர். இது தொடர்பாக பொய்யான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எமது போராட்டம் நேர்மையான போராட்டமாகும். பணம், லஞ்சம் மற்றும் பதவி போன்றவற்றினால் அதை ஒழிக்க முடியாது.

கேள்வி:- புலிகள் பலம் இழந்து விட்டதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. அது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- நாம் பலம் இழந்து விடவில்லை. எமது பலம் மக்கள்தான். அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற சண்டை இதற்கு பதில் அளிக்கின்றது. எமது எதிர்கால போராட்டங்கள் மூலம் எமது பலம் குறைந்துவிடவில்லை என்பது தெரிய வரும்.

இவ்வாறு பிரபாகரன் கூறியுள்ளார்.

No comments: