Monday, December 1, 2008

இலங்கையில் நடக்கும் போரால் அப்பாவி தமிழர்கள் அனுபவிக்கும் துன்பம்


இலங்கையில் நடக்கும் போரால் அப்பாவி தமிழர்கள் அனுபவிக்கும் கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. அவர்கள் தினமும் சந்திக்கும் கொடுமைகளை அவ்வளவு எளிதாக சொல்ல முடியாது. விமான தாக்குதல்கள், ராக்கெட் குண்டு வீச்சுகள் இத்தனைக்கும் மத்தியில் எப்படியாவது உயிர் பிழைத்தால் போதும் என தினமும் குழந்தை குட்டிகளோடு ஊர் விட்டு ஊர் ஓடுகிறார்கள்.
இடம் பெயர்ப்பு என்பது இப்போதல்ல 1980-ம் ஆண்டே தொடங்கி விட்டது.
அங்குள்ள வன்னி பகுதி மக்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள்.கிளிநொச்சி, முல்லைத் தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதே ஈழத்தின் வன்னிப் பெருநிலப் பகுதி. மன்னாரும் முல்லைத்தீவும் கடலோரமாவட்டங்கள். கடற்கரையோரப் பகுதிகள் தவிர, வன்னி நிலப்பகுதி முழுவதும் அடர்காடுகளால் நிறைந்தது. இடை இடையே ஊர்கள் பரந்திருக்கும். வயல்களில் அன்றாடம் கூலி வேலை செய்வது, மீன் பிடித்தொழில், அதை சார்ந்த வியாபாரங்கள் ஆகியவையே இம்மக்களுக்கான பொருளியல் ஆதாரம். 1995 அக்டோபர் 30 அன்று சிங்கள ராணுவம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி மிகப் பெரிய இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட இருப்பதால், உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயருமாறு புலிகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 5 லட்சம் மக்கள் ஓர் இரவில் இடம் பெயர்ந்தனர். இது தான் மிகப்பெரிய இடப்பெயர்வு ஆகும்.
மன்னார் மடு பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த ஜுன் மாத காலப்பகுதிக்குள்- ஆறு முறைக்கு மேல் தமது நிரந்தர இடங்களில் இருந்து இடம் பெயர்ந்ததன் பின்னர், தற்காலிக வாழ்விடங்களில் இருந்தும் மாற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். மடுவில் உலகப் புகழ் பெற்ற தேவாலயம் ஒன்று உள்ளது. கடந்த ஏப்ரல் 2008-ல் மடு தேவாலயத்தை முற்றிலும் அழிக்கும் அளவிற்கு சிங்கள ராணுவம் அதன் மீது தாக்குதல் நடத்தியது. அந்தப் பகுதியைச் சேர்ந்த இடம் பெயர்ந்த மக்களுக்கு அது நாள் வரை உறைவிடம் அளித்த அந்த தேவாலயமே தாக்குதலுக்கு உள்ளானது மக்களிடையே பெருலும் அச்சத்தையும் நம்பிக்கையின்மையையும் எழுப்பியது. மடுமாதா தாக்கப்பட்டதற்குப் பிறகு, அப்பகுதி மக்கள் வேறு பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம் பெயரத் தொடங்கினர். ஏற்கனவே இடம் பெயர்ந்த தேவாலயத்தில் அடைக்கலம் புகுந்திருந்த மக்களும், மடுப்பகுதியில் நிரந்தரமாக வாழ்ந்து வந்த மக்களும் மொத்தமாக வெளியேறத் தொடங்கினர். அன்று தொடங்கிய இடப் பெயர்வு இன்று வரை தொடர்கிறது.
வன்னிப் பெருநிலப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் போர் பாதிப்புகளால் இடம்பெயரும் மக்கள், யாழ்ப்பாணத்திற்கோ, கிழக்கு இலங்கைக்கோ, தென்னிலங்கைக்கோ போக முடியாமல், அங்கு போய் சிக்கிக் கொள்ள விரும்பாமல், வன்னிப் பெருநிலப் பகுதியையே சுற்றிச் சுற்றி வரும் அவலம். மிகச் சிறிய தீவான இலங்கையின் ஒரு சிறிய பகுதியே வன்னிப் பெருநிலப் பகுதி. இதைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் அதற்குள் எவ்வளவுதான் செல்ல இயலும்ப அதிலும் சிங்களப் பகுதிகளுக்கோ, ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கோ அருகிலுள்ள இடங்களைத் தவிர்த்து உட்புறம்தான் செல்ல வேண்டும். முன்னைப் போல் இந்தியாவிற்கு வருவதும் அத்தனை எளிதாக இருக்கவில்லை.
சற்று வசதி பெற்றவர்கள் குடும்பத்தில் ஒருவரையோ அல்லது ஒட்டுமொத்தாகவோ வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து விடுகின்றனர். அவர்கள் அனுப்பும் பணத்தில்தான் இங்குள்ளவர்கள் வாழ வேண்டும். ஆனால் அந்தப் பணமும் கைக்கு வந்து சேரும் என்ற உத்தரவாதமில்லை. பல வழிகளில் அந்தப் பணத்தை உரியவர் கையில் சேர்ப்பதுவுமே பெரும்பாடு. அப்படி வந்த பணத்தை வைத்து இடப்பெயர்வுக்கான செலவுகளை சமாளிப்பதே பெரும் சிரமம். இடப் பெயர்வுக்கான செலவு என்பதில் பெரும்பகுதி போக்குவரத்திற்கே போய் விடுகிறது.
பெரும்பாலும் டிராக்டர்களை பயன்படுத்தியே மக்கள் இடம் பெயர்கின்றனர். 5 கி.மீ. தூரத்திற்கு ரூ.4000, 10 கி.மீ.க்கு 10,000 என வாடகை செலுத்த வேண்டி யிருக்கிறது. காரணம் எரிபொருட் களின் விலை. தற்போதைய சூழ்நிலையில் மண்ணெண்ணெய் 1 லிட்டர் 130 ரூபாய்க்கும், பெட்ரோல் 1 லிட்டர் 700 ரூபாய்க்கும், டீசல் 1 லிட்டர் 170 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. பெரும்பாலான குடும்பங்கள் குழுவாக இணைந்து வாகனங்களை வாடகைக்கு அமர்த்துவதால், அவர்கள் எடுத்துச் செல்கின்றன. தத்தமது உடமைகளை மட்டுப்படுத்துகின்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இவ்வாறு வண்டி அமர்த்தி செல்லும் வசதியற்ற, அன்றாடம் கூலி வேலை செய்து வந்த ஏழை மக்கள், குடும்பத்தில் அனைவரும் தங்களால் சுமக்கக் கூடியவற்றை தூக்கிக் கொண்டு பாதுகாப்பான இடங்களைத் தேடி நடந்தே செல்லும் நிலை. இதற்கு குழந்தைகளும், முதியவர்களும் விதி விலக்கல்லர்.
இதற்கு நடுவில் நினைத்துப் பார்க்கவும் இயலாத நிலையில் இருக்கும் உணவுப் பொருட்களின் விலை. மன்னார் இலங்கையின் நெற்களஞ்சியம் என்றே அழைக்கப்பட்டது. ஆனால் தற்போது நெல் உற்பத்தி என்பது அறவே அற்றுப் போனதாக இருக்கிறது. வயல்கள், மீன் பிடி நிலையிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதால், உணவு உற்பத்தி முற்றிலுமாக நின்று போனது. இதனால் ஒரு மீனின் விலை 225 ரூபாய். அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் கிடைப்பதே அரிது. ஏனெனில் அவை வெளியிலிருந்து வர வேண்டும். சிங்கள ராணுவம் வன்னிக்குச் செல்லும் பாதையை முற்றுகையிட்டு நிற்கிறது. இதனால் வியாபார ரீதியாக உணவுப் பொருட்களை கொண்டு வருவது இயலாத ஒன்று. தொண்டு நிறுவனங்கள் தாம் உணவுப் பொருட்களை கொண்டு வந்து மக்களுக்கு அளித்துக் கொண்டிருந்தனர். அதையும் சிங்கள அரசு தடுத்து விட்டது. மேலும் தொண்டு நிறுவனங்களை வன்னியை விட்டு வெளியேறவும் சொல்லிவிட்டது. அரசின் உத்தரவையும் மீறி ஒரு சில தொண்டு நிறுவனங்கள் மட்டுமே அங்கு இயங்கி வருகின்றன.
சமைப்பதற்கான பொருள் கிடைத்தாலும், சமைப்பதற்கான உபகரணங்களை சுமந்து வர இயலாத நிலையில், விறகு வைத்துத்தான் சமைக்க வேண்டும். ஒரு சைக்கிள் சுமை விறகு 300 ரூபாய்க்கு விற்கிறது. அதற்குரிய பணத்தை இடம் பெயர்ந்து வாழும் மக்களால் செலுத்த இயலாது. இந்த காரணங்களால் அன்றாட சமையல் மற்றும் உணவு வழங்கல் என்பது மிகப்பெரிய சவாலாகவே இருக்கிறது.
வன்னிப்பகுதி முழுவதுமே காட்டுப் பகுதி நிலமாவதால், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக ஆகிவிடும். இந்த சூழலில் வெட்டவெளிகளில், மரங்களுக்கு அடியில் கூட்டமாக நெருங்கி வாழ நேரிடும்போது பல்வேறு சமூக, சுகாதார பிரச்சினைகளும், காட்டு பகுதியில் வாழ்வதால் பாம்பு போன்ற விஷ உயிரினங்களினாலான ஆபத்துகளையும் சந்திக்க வேண்டியுள்ளது.
வன்னிப்பகுதியில் பெரிய ஆறுகள் இல்லை. குளங்களும், மழை நீர் பெற்று ஓடும் சிற்றாறுகளுமே உண்டு. இதனால் சமையல் மற்றும் பிற தேவைகளுக்கான தண்ணீருக்காக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும். குறைந்தபட்சமாக ஒரு சராசரி மனுதனுக்கு, சமை யல் மற்றும் சுய சுகாதார தேவைகளுக்காக எட்டு லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது அணைகளுக்கு அருகிலோ அல்லது துப்புரவற்ற கிணறுகளுக்கோ அருகில் உள்ளவர்களில் சிலர் அந்த தண்ணீரையே சமையல், குளியல் மற்றும் பிற தேவைகளுக்காக பயன் படுத்துகின்றனர். இது நோய்கள் பரவும் தன்மையில் முக்கியமாக ஓர் அதிகப்படியான சுகாதார முறைகேட்டை தோற்று விக்கிறது.
மிகவும் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை தூக்கிச் செல்வதற்கான ஆம்புலன்ஸ் போன்ற எந்த வசதிகளும் கிடையாது. இதனால் மிதிவண்டிகளிலும், மாட்டு வண்டிகளிலுமே நோயாளிகளை எடுத்து செல்லும் நிலை இருக்கிறது. இயற்கை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு புறம், குண்டு வீச்சுகளினால் காயம்பட்டவர்கள் மறுபுறம் என மருத்துவமனைகள் எப்போதும் நிரம்பியே இருக் கின்றன. ஆனால் அத்தனை நோயாளிகளையும் கவனிக்க போதுமான மருத்துவர்கள் இல்லை. பெரும்பாலும் மருத்துவ உதவியாளர்களே சிகிச்சை களை கவனிக்க வேண்டும். வன்னிப்பகுதியில் இங்கி வந்த மருத்துவமனைகளில் பெரியதும் ஓரளவு வசதிகள் உடையதுமான கிளிநொச்சி மருத்துவமனை, அண்மையில் சிங்கள ராணுவத்தின் விமான குண்டு வீச்சித் தாக்குதலுக்கு உள்ளானது. இருந்த ஒரே நல்ல மருத்துவமனையும் சிதைக்கப்பட்ட நிலையில், மருத்துவ சிகிச்சை என்பதே பெரும் கேள்விக்குறியாகி நிற்கிறது.
பொதுவாக ஈழத் தமிழர்கள் கல்விக்கு பெரும் முக்கியத்துவம் அளித்து வந்திருக்கின்றனர். கல்விக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவம் காரணமாக, மக்கள் இடம் பெயரும் போது, பள்ளிகளும் இடம் பெயரும் விந்தையான சூழல் நிலவுகிறது. பள்ளிகள் இடம் பெய்வது என்பது, வெறும் உபகரணங்களின் இடப்பெயர்வு அல்ல. அப்பள்ளியில் பயின்ற, பயிலுகின்ற அனைத்து மாணவர்கள் பற்றிய ஆவணங்களையும் பாதுகாப்பாக இடம் மாற்றுவது மிகவும் பெரும் பணி. கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 115 பள்ளிகள் இடம் பெயந்துள்ளன.
ஒன்றிணைக்கப்பட்ட பள்ளிகள் பிரதான பள்ளிகளில் இயங்குகின்றன. சில இடங்களில் ஒரே வளாகத்தில் 10 பள்ளிகள் ஒருங்கிணைக்கப்பட்டு இயங்கும் நிலையும் உள்ளது. இந்த எதிர்பாராத சூழல் காரணமாக ஆசிரியர்கள், வகுப்பறைகள், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் ஆகியவற்றில் பற்றாக் குறைகள் ஏற்பட்டுள்ளன.
இந்த இடப்பெயர்வின் அழுத்தம் மாணவர்களையும் வெவ்வேறு விதங்களில் பாதித்துள்ளன. தேசிய மட்டத்திலான தேர்வுகள் மற்றும் பாடத்திடங்கள் சீரற்றவையாக உள்ளன. தங்களின் தேர்வுகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலையில், கல்வியை மேற்கொண்டு தொடர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. தேர்வுகளை எழுதிக்கொண்டிருந்த தருணங்களில் சிங்கள விமானங்கள் பள்ளி வளாகத்தில் குண்டு வீச்சை நடத்திய காரணத்தினால், பள்ளிக்கூடங்களை விட்டு நிற்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
உளவியல் தாக்கம் என்பது மிகவும் அதிகப்படியானதாகவே இருந்துள்ளது. பல மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதற்கு அஞ்சுகின்றனர். வகுப்புகளோ, தேர்வுகளோ எது நடந்து கொண்டிருந்தாலும் விமான சத்தம் கேட்டால் எழுந்து ஓடி பதுங்கு குழிகளுக்குள் இறங்கிவிட வேண்டும் என்பது, குழந்தைகளுக்கு ஒரு பயிற்சியாகவே அளிக்கப்பட்டுள்ளது.
குண்டு சத்தத்திற்கு அஞ்சி கண்ணையும், காதையும் இறுக மூடித் திறப்பதற்குள், அருகிலிந்தவர் செத்து விழும் கொடுமையை காண நேரும் குழந்தைகள், பெரும் மன அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். பெற்றோரை விட்டு பள்ளியில் இருக்கும் நேரத்தில், இதுபோன்ற அனுபவங்களினால் மிகப்பெரிய அளவில் பாதுகாப்பின்மை மனநிலைக்கு தள்ளப்படு கின்றனர்.
அதனால் பெற்றோரை விட்டு பள்ளிக்க வரவே அஞ்சுகின்றனர். வெளியேறிய இடங்களில் உள்ள ஆசிரியர்களும் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக இவை அனைத்தையும்விட, இடப்பெயர்வு என்பது பெரும் சமூகச்சிக்கல்களை தோற்றுவித்துள்ளது. ஒர் ஊரில் பல தலைமுறைகளாக ஒரே சமூகமாக கூடி வாழ்ந்த மக்கள் பல திசைகளில் சிதறும் பொழுது, சமூகப் பிணைப்பு பாதிக்கப்படுகிறது. திருமணம் போன்று வாழ்வில் இயல்பாக நடக்க வேண்டிய நிகழ்வுகள் அதனதன் போக்கில் நடக்க இயலாமல் தேக்கம் ஏற்படுகிறது. இதனால் பல ஆண்களும், பெண்களும் திருமண வயதைக்கடந்தும் திருமணம் ஆகாமல் வாழ்கின்றனர். எந்தவொரு அவலத்திலும் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே என்பதற்கு இச்சமூகமும் விதி விலக்கல்ல. அடிக்கடி நிகழும் சாவு, உணவுக்காக கையேந்தி நிற்கும் நிலை, நிரந்தர வாழ்விடம் இன்றி மாறிக்கொண்டேயிருப்பது போன்றவை, குழந்தைகள் மனதில் பெரும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

No comments: